PUBLISHED ON : மே 30, 2016

நமக்குப் பிடித்தவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் தர வேண்டும் என்றால், கடைக்குக் கிளம்புவோம்... ஒரு மாற்றத்துக்கு, வாழ்த்து அட்டைகளை நாமே செய்யலாமே...
தேவையான பொருட்கள்
* A4 அளவு கருப்பு நிற சார்ட் - 1,
* A4 அளவு வண்ணத்தாள்கள்:
ஒளிரும் பச்சை நிறம் -1 ,
சிவப்பு நிறம் -1,
ஆரஞ்சு நிறம் -2,
* கருப்பு நிற ஸ்கெட்ச்,
வைட்னர் பேனா,
பசை, கத்தரிக்கோல்.
கருப்பு நிற சார்ட் அட்டையை இரண்டாக மடித்துக்கொள். அதற்குள் பச்சை நிறத் தாளை ஒட்டு. ஓரங்களில் சார்ட் தெரியும் வகையில், பச்சைத் தாளின் ஓரங்களைக் கத்தரித்து ஒட்டு. வாழ்த்து அட்டையின் அடித்தளப் பகுதி தயார்.
சிவப்பு நிறத் தாளையும், ஆரஞ்சு நிறத் தாள்களையும் நான்காக மடித்து, கால் பகுதிகளாக வெட்டிக்கொள். ஒரு கால் (1/4) பகுதியை நான்காக மடித்து, பக்கவாட்டில் இருக்கும் இரண்டு பக்கங்களையும் முக்கோண வடிவில் மடிக்க வேண்டும். அந்த மடிப்பில் இதழ் வடிவத்தை வரைந்து, வெட்டினால், எட்டு இதழ் கொண்ட ஒரு பூ கிடைக்கும்.
கருப்பு ஸ்கெட்ச், வைட்னர் பேனாவால் பூவுக்குள் மகரந்த இழைகளை வரைந்துகொள்.
ஓர் இதழைக் கத்தரித்து எடுத்துவிட்டு, இடைவெளிக்கு முன்னும் பின்னும் இருக்கும் இதழ்களைச் சேர்த்து ஒட்டிவிடு. இப்போது பூ மலர்ந்த தோற்றத்தில் இருக்கும். இப்படி, ஒரு சிவப்பு நிறப் பூவையும், 6 ஆரஞ்சு நிறப் பூக்களையும் செய்ய வேண்டும்.
அடுத்து இந்தப் பூக்களை இரண்டாக மடித்துக் கொள்.
அம்புக்குறிகளைப் பார்த்து ஒரு பூவின் மேல் இன்னொரு பூவைப் பொருத்தவும்
ஓர் இதழ் இடைவெளி கிடைக்கும் வகையில் ஒட்டி, வாழ்த்து அட்டைக்குள் பொருத்திவிட வேண்டும்.
வெட்டி எஞ்சிய இதழ்களை முதல் பக்கத்தில் ஒட்டிவிடலாம். திறந்ததும் பூக்கள் மலரும் அழகிய வாழ்த்து அட்டை தயார். பிறருக்குக் கொடுத்து அசத்த வேண்டியதுதான்!
-ஓவியா டீச்சர்

