PUBLISHED ON : ஆக 12, 2019

மொழிப் பற்றாளர்களும், தமிழறிஞர்களும் தமிழுக்கான பல புதிய சொற்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தமிழில் கலைச்சொற்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டுவரும் சூழலில், நீங்கள் கற்றுக்கொண்ட புதிய தமிழ்ச் சொற்கள் என்ன? என கேட்டிருந்தோம். பதிலறிய, கடலுார் மாவட்டம், கோபாலபுரம், ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம்.
கிருஷ்ண பிரசாந்த் (12ஆம் வகுப்பு)
தினமும் காலையில் காஃபி குடிச்சுத்தான் எனக்கு பொழுதே விடியும். காஃபி எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஆனா அதுக்கு குளம்பின்னு தமிழ்ப்பெயர் இருக்குன்னு, ஸ்கூல்ல நடந்த நிகழ்ச்சியில்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
கிரண் (12ஆம் வகுப்பு)
சினம்னா கோபம்னு தெரியும். ஆனா கோபத்துக்கு வெகுளின்னு இன்னொரு சொல்லும் இருக்குன்னு புதுசா தெரிஞ்சுக்கிட்டேன். அதை எங்க தமிழாசிரியர் பாடம் நடத்தும்போது சொன்னார். அதுவரை வெகுளின்னா ஏமாளி, விவரம் தெரியாதவர்ன்னு மட்டும் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
சுவேதா (11ஆம் வகுப்பு)
எங்க வீட்டுல, டெய்லி நைட்டில் சாப்பிட்ட அப்புறமா பேசிக்கிட்டிருப்போம். அப்போ, சோப்புக்கு (soap) தமிழில் வழலைக்கட்டின்னு ஒரு வார்த்தை இருப்பதாக என் தாத்தா சொன்னார். அந்த வார்த்தையையே முதல்முறையா நான் அப்போதான் கேள்விப்பட்டேன்.
மதுமிதா (11ஆம் வகுப்பு)
ஒரு நாள், நாய்க்கு இன்னொரு பெயர் இருக்கு தெரியுமான்னு எங்க அப்பா கேட்டார். 'ஞமலி' என்றாலும் நாய்தான்னு அப்பா சொன்னதை நம்பாமல் கூகுளில் தேடினேன். அப்பா சொன்னது சரிதான்னு தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் என்ன தோழிகளிடம் 'ஞமலின்னா என்ன'ன்னு கேள்வி கேட்டு, கலாட்டா செஞ்சேன்.
அகல்யா (11ஆம் வகுப்பு)
பிரகடனம் என்ற வார்த்தைக்கு 'சாசனம்' என்பதுதான் சரியான தமிழ்ச்சொல்லுன்னு என் தோழி சொன்னாள். ஆசிரியரிடம் கேட்டபோது, சரிதான்னு சொன்னாங்க. அதுவரை அப்படி ஒரு வார்த்தையே கேட்காத எனக்கு அந்த வார்த்தை புதுசு.
ரேஷ்மா (10ஆம் வகுப்பு)
'செப்புதல்' என்பதே நான் கற்றுக்கொண்ட புதுச் சொல். இதோட அர்த்தம், பேசுதல். தமிழ் மிஸ் இதைப்பத்தி சொன்னபோது, உண்மையில் அசந்துபோனேன். 'செப்பு மொழி பதினெட்டுடையாள்'னு பாரதி பாடினதோட அர்த்தம் அன்னிக்குத்தான் புரிஞ்சுது.

