PUBLISHED ON : டிச 05, 2016

வழுதுணங்காய் தெரியுமா? சாம்பராகவும், காரக்குழம்பாகவும், பொரியலாகவும், வறுவலாகவும் சமையலில் பயன்படுத்துகிறோம். நிறைய விளையும்போது, வற்றலாக்கிக் கொள்கிறோம். அனைவரும் அறிந்த கத்தரிக்காய்க்குத்தான், வழுதுணங்காய் என்று பெயர்.
வழுதலை, வழுதுணை என்றும் இதை அழைப்பர். இதன் இன்னொரு உட்பிரிவான கண்டங்கத்தரியையும், வழுதுணங்காய் என்றே கூறுவர். கண்டங்கத்தரி இயற்கை மருத்துவத்தில் பயன்படுகிறது.
'வழுதுணை வித்திடப்
பாகல் முளைத்தது
புழுதியை தோண்டினேன்
பூசணி பூத்தது
தொழுது கொண்டோடினார்
தோட்டக் குடி மக்கள்
முழுதும் பழுத்தது
வாழைக்கனியே'
என்பது திருமூலர் பாட்டு. கத்தரிக்காயை விதைத்தேன், பாகற்கொடியாக முளைத்து வந்தது. கொஞ்சம் மண்ணைக் கிளறிப் பார்த்தேன்; பூசணி பூத்திருந்தது. அதையும் தோட்டத் தொழிலாளர்கள் எடுத்துச் சென்றனர். வாழை முழுமையாக பழுத்தது என்பது இப்பாடலின் பொருள்.
வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவென்றே புளித்த மோரும் புல்வேளூர்ப்
பூதன் புகழ்பரிந் திட்டசோ
றெல்லா வுலகும் பெறும்
புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பூதன் என்பவர், ஔவையாருக்கு உணவளித்தார். அதில் வரகு அரிசி சோறு, கத்தரிக்காய்ப் பொரியல், புளித்த மோர் இருந்தது.
ஒளவையார் அதை சாப்பிட்டு பசியாறியதோடு, அந்த உணவு பற்றியும் கவிதை எழுதி விட்டார்.
'வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே'
என்பது நாலடியார் செய்யுள் வரி (நாலடி. 264).
ஊதா, இளம் பச்சை, வெள்ளை நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. இவை உருண்டை, நீள் உருண்டை வடிவங்களில் உள்ளன.
