''இந்தப் பேனா வேண்டாம்; அதற்க்குப் பதிலாக அந்தப் பேனா கொடுங்கள்.”
''இந்தப் பேனா வேண்டாம்; அதற்க்குப் பதிலாக அந்தப் பேனா கொடுங்கள்.”
PUBLISHED ON : அக் 19, 2016

இந்த வாக்கியம் சரிதானா?
சத்தமாகச் சொல்லிப் பார்த்தாலே புரிந்துவிடும். “அதற்க்கு” என்ற இடம் கொஞ்சம் அதிகமாக நீண்டு அழுந்தி ஒலிக்கும். அது அவசியமற்றது.
பேசும்போது நாம் “அதற்கு” என்றுதான் சொல்கிறோம். ஆனால், எழுதும்போதுமட்டும் “அதற்க்கு”, “இதற்க்கு”, “எதற்க்கு” என்றெல்லாம் எழுதிவிடுகிறோம்.
இந்தப் பிழையைத் தவிர்க்க ஒரே வழி, இந்தச் சொல் எப்படி உருவானது என்பதைத் தெரிந்து கொள்வதுதான். அப்போது ”அதற்கு” என்பது சரியா, அல்லது, “அதற்க்கு” என்பது சரியா என்று புரியும்.
காஃபியில் பால், டிகாஷன், சர்க்கரை என மூன்று இருக்கிறதல்லவா? அதுபோல, தமிழில் சில சொற்களைப் பிரிக்கலாம், அவற்றைப் 'பகுபதம்' என்பார்கள். அதாவது, பகுக்கக்கூடிய பதம்.
ஆனால், தண்ணீரைப் பிரித்துப் பார்க்க முடியுமா?
ஓ, முடியுமே. இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்சிஜன்... வேதியியல் பாடத்தில் படித்திருக்கிறோமே.
சரி, ஹைட்ரஜனைப் பிரிக்க முடியுமா?
ஓ, அதுவும் முடியுமே... எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான்
இப்படிப் பிரித்துக் கொண்டே போனால், ஒருகட்டத்தில் பிரிக்க முடியாத ஒரு பொருள் வருமல்லவா? அதுதான் பகாப்பதம், அதாவது, பகுக்கமுடியாத பதம் (சொல்).
'அதற்கு' என்பது பகுபதம்.
அது + அன் + கு = அதற்கு
இங்கே 'அது' என்பது ஓர் அஃறிணைப் பொருளைக் குறிக்கிறது. 'அந்தப் பேனாவுக்குப் பதில்' என்று சொல்கிறோமல்லவா? அந்தப் பேனாதான் அஃறிணை, ஆகவே, 'அது' என்கிறோம்.
'அன்' என்பது அதோடு சேரும் விகுதி,
அது + அன் = அதன்
நிறைவாக, 'கு' என்பது வேற்றுமை உருபு, எனக்கு, உனக்கு, அவனுக்கு, ஆசிரியருக்கு என்று சொல்கிறோமல்லவா? அதுதான்.
ஆக, அது + அன் + கு = அதன் + கு
இந்தச் சொற்கள் சேரும்போது, 'ன்' என்கிற எழுத்து மாறி 'ற்' என்கிற எழுத்து தோன்றும். அதாவது, அதன் + கு = அதற் + கு = அதற்கு
அதேபோல்,
இது + அன் + கு = இதற்கு
எது + அன் + கு = எதற்கு
இங்கே 'க்' தோன்றுவதற்கு வழியே இல்லை. ஆகவே, அதற்க்கு என்று எழுதவேண்டாம், அதற்கு என்றே எழுதுங்கள்.
- என். சொக்கன்

