PUBLISHED ON : மே 30, 2016

'உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எப்போதுமே இருப்பவர், ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நிலையான வெற்றிகளைப் பெற்று கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர்' பில் கேட்ஸ்.
அக்டோபர் 28, 1955ல் பில் கேட்ஸ் பிறந்தபோது, உலகில் இருந்த மின்னணு கணினிகளின் எண்ணிக்கை ஐந்நூறுக்கும் குறைவு. மென்பொருள் (Software) என்ற சொல்லே அப்போது இல்லை.
'உலகில் உள்ள கணினிகள் அனைத்தையும் இணைக்க கணினிப் பின்னல் (Web) ஒன்று எதிர்காலத்தில் வரும்' என்று உறுதியாகக் கூறி, அதற்கான பாதையையும் அமைத்தார் கேட்ஸ்!
கணினிக்கான முதல் நிரலை (Program) எழுதியபோது அவருக்கு வயது 13. அந்த வயதில் அவர் எழுதியது, விளையாட்டுக்கான நிரல்!
ஒன்பதாவது வயதிலேயே உலகக் கலைக்களஞ்சியத்தை (World book of encyclopedia) கற்றுத் தேர்ந்தார். இளம் வயது கேட்ஸிடம், 'என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டால், 'சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்' என்று சொல்வாராம். அந்தப் பதிலைக் கேட்டுக் குழம்புபவர்களிடம், 'நீங்கள் சிந்திப்பதே இல்லையா?' என்று திருப்பிக் கேட்பாராம்.
இத்தனைக்கும் பில் கேட்ஸ் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இருந்து தனது படிப்பை 1975ல், பாதியில் நிறுத்திக்கொண்டவர் (College dropout). இருந்தாலும், அதே பல்கலைக்கழகம் 2007ல் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
கேட்ஸின் அறிவு அலகு (IQ - Intelligence quotient) வியப்பைத் தரும் அளவில் அதிகமாக இருந்தது. பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அந்த அழகுணர்வும் ஆர்வமும்தான் அடுக்கடுக்காகச் செய்திகளைச் சேமித்துப் பயன்படுத்தும் விண்டோஸ் இயங்குதளமாக (windows OS) பின்னாளில் பரிணாமம் பெற்றது போலும்!
அதற்காக, 'வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், படிக்காமல் இருக்க வேண்டுமா?' என்று கேட்கக் கூடாது. நம்பிக்கையும் விடாமுற்சியும் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புரிதலைத்தான், தனது, 'The Road Ahead' என்கிற புத்தகத்தில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் பில் கேட்ஸ்.

