
விஞ்ஞானமும் நாகரிகமும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து வரும் காலம் இது. நாமும் அதனுடன் ஓடித்தான் ஆக வேண்டும். நேரப் பற்றாக்குறை. கிரைண்டர், மிக்ஸி, ஃப்ரிட்ஜ் போன்ற இயந்திரங்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம். இப்படியே நமக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பல பொருட்களைத் தொலைத்துவிட்டோம். அதில் சில பொருட்களைப் பற்றிப் பார்ப்போம்...
முறம் (சுளகு) : தானியங்களில் இருந்து உமி, கல் போன்றவற்றைப் பிரித்தெடுக்க உதவும். இதை, புடைத்தல் என்பார்கள். மூங்கில் பட்டையால் முடையப்பட்டு விளிம்புகள் கட்டப்பட்ட முறம், அடிப்பகுதியில் அகன்றும் நுனிப்பகுதியில் குறுகியும் ஏறத்தாழ முக்கோண வடிவில் இருக்கும். நீண்டகாலம் உபயோகிக்க முறத்தின் அடிப்புறம் பசுவின் சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும்.
ஆட்டுக்கல்லும் குழவியும்: ஆட்டுக்கல் அல்லது ஆட்டுரல் என்பது கல்லினால் செய்யப்பட்டு இருக்கும். இது மாவு அரைக்க உதவும். இதனுடன் குழவிக் கல் ஒன்றும் இருக்கும். இதன் நடுப் பகுதியில் உள்ள குழியில் அரிசி, பருப்பு போன்றவற்றை ஊற வைத்து அரைப்பார்கள்.
உறி: பல சிறு பானைகள், சட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, கயிற்றில் கட்டித் தொங்கவிடும் அமைப்பு உறி. தயிர், மோர் போன்ற உணவுகளை பூனை, நாய் போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்தும் குழந்தைகளிடமிருந்தும் பாதுகாக்க எட்டாத உயரத்தில் தொங்கவிடுவார்கள்.
உரலும் உலக்கையும்: தானியங்களை இடிக்கப் பயன்படும். மரத்தாலோ கருங்கல்லாலோ செய்யப்பட்டிருக்கும். இதன் மேல்பக்கத்தில் ஓர் அடிவரை குழி போன்ற அமைப்பு இருக்கும். இந்தக் குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு உலக்கையை வைத்து இடிப்பார்கள்.
அம்மியும் குழவியும்: அம்மி என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைக்க உதவும். இதனுடனும் குழவி என்று அழைக்கப்படும் ஒரு கருங்கல் இருக்கும். இதை இருகைகளாலும் பற்றி உருட்டியும் இடித்தும் இழுத்தும் பொருட்களை அரைப்பார்கள்.
முன்பெல்லாம் தமிழக கிராமங்களில் ஊருக்குப் பொதுவான இடத்தில் ஓர் அம்மி, ஆட்டுக்கல் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

