PUBLISHED ON : டிச 05, 2016

இயல், இசை, நாடகம் என்று தமிழை மூன்றாகப் பிரிப்பார்கள். நாடகத் தமிழுக்கு அருந்தொண்டாற்ற முன்வருவது அந்த காலத்தில் மிகவும் அரிது. நாடகக் கலைக்கு, உயிரூட்டியவர்களில் ஒருவர், பம்மல் சம்பந்த முதலியார்.
இவரது வருகைக்குப் பின்னர்தான், நாடகத்தில் அரங்க நிர்மாணம், காட்சிப் பிரிப்பு, ஒளியமைப்பு போன்றவை நடைமுறைக்கு வந்தன. முறையான நாடகக் குழுக்களை அமைத்து, நாடகங்களை அரங்கேற்றும் முறை தோன்றியது. பாட்டும் ஆட்டமுமாக இருந்த கூத்துமுறை மாறி, நாடக கதாபாத்திரங்கள், நல்ல தமிழில் உரையாடும் நிலை அறிமுகமானது.
சென்னைக்கு அருகே பம்மல் என்ற சிற்றூரில் பிறந்தவர். இவரது தந்தை விஜயரங்கம் ஆசிரியராகவும், புத்தகப் பதிப்பாளராகவும் இருந்தார். அதனால் அவரின் வீட்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன. இளமையிலேயே அந்நூல்களில் பலவற்றைச் சம்பந்தம் படித்திருந்தார்.
சட்டம் பயின்ற அவர், முதலில் வழிக்கறிஞராகப் பணியாற்றினார். பின் நீதிபதி பொறுப்பு வகித்தார். 1981ம் ஆண்டில், 'சுகுண விலாச சபை' என்ற பெயரில் நாடக நிறுவனம் தொடங்கினார். அக்குழு, பல்வேறு நாடகங்களைத் தமிழகமெங்கும் நடத்தியது.
35 ஆண்டுகள் இந்தக் குழு செயல்பட்டது.
சம்பந்தம் மேடையேற்றிய நாடகங்களில்,
* காட்சிகளுக்கு இடையிலான நேர இடைவெளி குறைந்து, தொடராக காட்சிகள் தோன்றின.
* புராண இதிகாச நாடகங்கள் மட்டுமே நிகழ்த்தப்பட்ட நிலை மாறி, சமூக நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.
* ஐரோப்பாவில் புகழ்பெற்றிருந்த ஷேக்ஸ்பியரின் நாடகங்களை, தமிழுக்கேற்ப ஆக்கி அரங்கேற்றினார். மகபதி (Macbeth), வாணிபுர வணிகன் (The Merchant of Venice) ஆகியவற்றை தமிழகத்துக்கு ஏற்ப மாற்றி எழுதி நடித்தார்.
* நாடக ஆசிரியர் மட்டுமன்றி, சிறந்த நடிகராகவும் இருந்தார்.
பம்மல் சம்பந்த முதலியார்
01-02-1873
24-09-1864
புத்தகங்கள்
இவர் எழுதிய நாடகங்கள் புத்தகமாக்கப்பட்டுள்ளன.
என் சுயசரிதை, நாடகத் தமிழ், நாடகமேடை அனுபவங்கள் போன்ற தன் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். அவை, அக்காலத் தமிழ் நாடகமேடை வரலாற்றை அறிய உதவுகின்றன.
நாடகங்கள்: சுலோசனா, புஷ்பவல்லி, உத்தம பத்தினி, கள்வர் தலைவன், மனோகரா, சபாபதி
பட்டங்கள்: ஆங்கில அரசு வழங்கிய ராவ் பகதூர் பட்டம். இந்திய அரசின் பத்மபூஷண், தமிழ் நாடகத்தந்தை என்று போற்றப்படுகிறார்.
- காவிரிமைந்தன்
