
நமக்குள் சிறு வயதில் எத்தனையோ கனவுகள் இருக்கும். கடல்களைக் கடந்து புதிய தேசங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கொலம்பஸ் கண்ட கனவு! இத்தாலியின் ஜெனோவா (Genoa) நகரில் 1451ல் பிறந்தவர் 'கிறிஸ்டோபர் கொலம்பஸ்' (Christopher Columbus). தனது கனவு தந்த உந்துதலால் பதினான்கு வயதிலேயே மாலுமி ஆனார் கொலம்பஸ். கடல் வழிப் போக்குவரத்து அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் பண்ட மாற்றம், வணிகம் போன்றவை தரை வழியாகத்தான் நடந்தன.
கொலம்பஸ் 1476ல் கடல் வழியாக ஐஸ்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றார். ஆசியாவுக்குக் கடல் மார்க்கத்தைக் கண்டுபிடிப்பதே அவரது கனவாக இருந்தது. இந்த முயற்சிக்கு உதவுமாறு இங்கிலாந்து, போர்ச்சுகல் அரசாங்கத்தைக் நாடினார். ஆனால் கிடைக்கவில்லை. ஸ்பெயின் நாட்டு ராணி இஸபெல்லா உதவ முன்வந்தார். அந்த உதவியின் உற்சாகத்துடன், 1492ல், தனது 41ஆவது வயதில் தன் லட்சியக் கனவை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார் கொலம்பஸ்.
சான்டா மரியா (Santa Maria), நினா (Nina), பின்டா (Pinta) என்ற மூன்று கப்பல்களில் அவருடன் 100 பேர் பயணித்தனர். நிலப்பரப்பு காணாமல் கடலிலேயே அலைந்த பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு கரைப்பகுதி கண்ணில் பட்டது. தன் கனவுப் பயணமான, இந்தியாவைக் கண்டுபிடித்துவிட்டோம் என்று நினைத்தார் கொலம்பஸ். ஆனால், அவர் கண்டுபிடித்தது வட அமெரிக்காவின் 'பஹாமாஸ் தீவு'. இது அவருக்கு அப்போது மட்டுமல்ல, இறக்கும்வரை கூடத் தெரியாது.
அதன் பின் மேலும் சில பயணங்கள் செய்து கெனேரித் தீவுகள், பனாமா போன்ற நாடுகளையும், பல சிறிய தீவுகளையும் கண்டுபிடித்தார். கொலம்பஸ் மேற்கொண்ட ஆய்வுப் பயணங்களால்தான் ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையில் கடல் வழி வர்த்தகம் தோன்றியது.
பல நாடுகளைக் கண்டுபிடித்து ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ், 1506ல் காலமானார். ஏழு கண்டங்கள், ஏழு கடல்கள் இருக்கிறது என்பது இப்போது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த உண்மைகள் நமக்குத் தெரிவதற்கான ஆரம்பப் புள்ளியாக, கொலம்பஸ் கண்ட கனவு இருந்திருக்கிறது.

