PUBLISHED ON : டிச 24, 2018

சுற்றுச்சூழலில் ஆர்வம் உடையவர்கள் அனைவரும் அடிக்கடி குறிப்பிடுவது ஓஸோன் படலத்தில் சேதம் ஏற்படுவதைப் பற்றியும், அதனால் விளையும் தீமைகளைப் பற்றியும்தான்.
ஓஸோன் என்பது என்ன?
ஓஸோன் என்பது இளநீல வண்ணம் கொண்ட ஒரு வாயு. மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இணைந்த ஒரு மூலக்கூறு (O3). பூமிக்கு மேல் 10-50 கி.மீ. தூரத்தில் இருக்கும் பகுதியை 'ஸ்ட்ராட்டொஸ்ஃபெரிக் மண்டலம்' என்பார்கள். இங்கே பூமிக்கு மேல் 13 லிருந்து 20 கி.மீ. பகுதியே, 'ஓஸோன் லேயர்' என சொல்லப்படுகிறது.
ஓஸோன் வாயு எப்படி உண்டாகிறது?
இயற்கையாகவே உண்டாகிறது. ஆக்சிஜன் மூலக்கூறில் இரு ஆக்சிஜன் அணுக்கள் இருக்கும். ஆக்சிஜன் (O2) சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்களுடன் வினைபுரிந்து, இரு ஆக்சிஜன் அணுக்களாகப் பிரியும். இந்த இரு அணுக்களும் வேறொரு ஆக்சிஜன் மூலக்கூறுடன் சேர்ந்து, மூன்று அணுக்களை உடைய ஒரு புதிய மூலக்கூறாக உருவெடுக்கும் (O3). இதுதான் ஓஸோன்!
ஓஸோன் நல்லதா கெட்டதா?
ஓஸோன் தாழ்வான உயரத்தில் இருக்கும்போது...
* காற்றை அசுத்தப்படுத்தும்.
* விலங்கினங்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
* சில தாவரங்களைக் கருகிப் போகச் செய்யும்.
ஓஸோன் அதிகமான உயரத்தில் இருக்கும்போது…
சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களைத் தடுத்து, பூமிக்குள் ஊடுருவாமல் செய்யும். இந்தப் புறஊதாக் கதிர்கள் மனிதர்களுக்குத் தோல் புற்றுநோய், கண்ணில் புரை விழுதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. பிளாங்க்டன் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் பெருமளவு பாதிக்கப்படும்.
- லதானந்த்
