PUBLISHED ON : ஜூன் 19, 2017

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா பகுதியில் உள்ளது, பிளாக் ஹில்ஸ் (Black Hills) மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பாறை சிகரப் பகுதியில் 'மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவுச் சின்னம்' (Mount Rushmore National Memorial) அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கிரானைட் பாறைப் பகுதியில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்சன், தியோடர் ரூஸ்வெல்ட், ஆபிரகாம்லிங்கன் ஆகியோரின் முகச் சிற்பங்கள் பிரமாண்டமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பமும் 60 அடி உயரம் கொண்டது. ஆபிரகாம்லிங்கனின் கண் பகுதி மட்டும், ஒரு மனிதன் நிற்கக்கூடிய அளவுக்கு, சுமார் 6 அடி உயரம் உடையது என்றால், அதன் பிரம்மாண்டம் எப்படியிருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள்.
பெருமைமிக்க இந்தச் சிற்பங்களை உருவாக்க முயற்சி செய்தவர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண வரலாற்றுக் கழகத்தின் மேலாளராக இருந்தவர் 'டோன் ராபின்சன்' (Doane Robinson) என்பவர். கட்சன் போர்க்ளம் (Gutzon Borglum), அவரது மகன் லிங்கன் போர்க்ளம் (Lincoln Borglum) ஆகிய இரண்டு சிற்பிகளிடம் இப்பணியை அவர் ஒப்படைத்தார். கட்சன் போர்க்ளம் இந்தச் சிற்பங்களை வடிவமைக்கும் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது 60. அந்த வயதிலும் சுமார் 2,000 மீட்டர் உயரம் உள்ள பாறைப் பகுதியின் மீது ஏறி, சிற்பம் அமைக்கும் பணியை அவர் செய்தார். அவருடன் 400க்கும் மேற்பட்ட சிற்பிகள் உடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனர். சிற்பங்களை வடிக்கும் பணி 1927 முதல் 1941 வரை, சுமார் 14 ஆண்டுகள் நடைபெற்றது.
ரஷ்மோர் மலைத்தொடர் பகுதி, 1,278 ஏக்கர் பரப்பளவைக்கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து இதன் உயரம் 5,725 அடி. இந்தச் சிற்பங்களை வடிவமைப்பதற்காக, சுமார் 2.5 லட்சம் டாலர்கள் அமெரிக்க அரசால் செலவிடப்பட்டது. அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றாகவும், பலரைக் கவர்ந்திழுக்கும் சுற்றுலா தலமாகவும் ரஷ்மோர் மலைத்தொடர் உள்ளது. ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்கு வருகை தருகிறார்கள்.
- ப.கோபாலகிருஷ்ணன்