PUBLISHED ON : பிப் 08, 2016

திரைப்பட அரங்கம், நாடக அரங்கம் ஓகே... சண்டை போடுவதற்காகவே ஓர் அரங்கம் இருக்கிறதா? ஆம். அதன் பெயர் 'கொலோசியம்' (Colosseum). அது இப்போது உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
ரோம் தேசத்தில் (Rome) நீள்வட்ட வடிவத்தில் அமைக்கப்பட்ட புகழ் பெற்ற கலை அரங்கம் கொலோசியம். சண்டை போடவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காகவே கட்டப்பட்ட அரங்கம். கி.பி. 72ல் வெஸ்பாசியன் (Vespasian) என்ற பேரரசர் இதைக் கட்டத் தொடங்கினார். அவர் மகன் டைட்டஸ், கி.பி. 80ல் கட்டி முடித்தார்.
இந்த அரங்கத்தில், கைதிகளைப் போர் வீரர்களுடன் மோத விடுவார்கள். விலங்குகளுடன் சண்டை போடவிடுவார்கள். சாதாரணக் கைதிகளை பயங்கரமான கொலைக் குற்றவாளிகளுடன் மோதவிட்டு ரசிப்பார்கள்.
இங்கே ஒரு சமயத்தில் 50 ஆயிரம் பேர் அமர்ந்து வேடிக்கை பார்க்கக்கூடிய அளவு இடவசதி இருந்தது.
கி.பி. 217ஆம் ஆண்டு தாக்கிய மின்னலால் இந்த கொலோசியம் சிதைந்தது. கி.பி. 238ல் மீண்டும் சரி செய்யப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மறுபடியும் இடிந்து விழுந்தது.
சண்டையிடுவதற்காக ரோம் நாட்டு மன்னர்களால் கட்டப்பட்ட அரங்கங்களிலேயே பெரியது, 'அம்பி தியேட்டர்' (Amphi Theatre) என அழைக்கப்பட்ட கொலோசியம்.
கொலோசியத்தில் சண்டையிடுபவர்கள் 'கிளாடியேட்டர்' (Gladiator) என்று அழைக்கப்பட்டனர். லத்தீன் மொழியில் 'கிளாடி' என்பதற்கு 'வாள்' என்று பொருள். கிளாடியேட்டர் வாள் வீரனைக் குறிக்கும். ஆரம்ப காலத்தில் இங்கே வாள் சண்டைகள்தான் பிரபலம்!
மனிதர்கள் சந்தோஷமாக இருக்க அரங்கம் கட்டலாம். சண்டை போட்டு, கொல்ல ஓர் அரங்கமா? என்னத்தைச் சொல்ல!

