PUBLISHED ON : ஜன 01, 2018

ஹென்றி டேவிட் தோரோ (Henry David Thoreau)
(1817 - 1862)
எழுத்தாளர், இயற்கையியலாளர்
அமெரிக்கா
நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதுமா? போதாது. இயற்கைக்கு உதவுபவர்களாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை அனுசரித்து எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்ட 'ஹென்றி டேவிட் தோரோ' இதைத்தான் வலியுறுத்தினார். இவர் கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி, இயற்கையியலாளர் என பன்முக ஆர்வம் கொண்டவர். இது மட்டுமல்ல; சர்வேயராகவும், வரி எதிர்ப்பாளர், வளர்ச்சி விமர்சகர் என பல துறைகளில் சிறந்து விளங்கினார்.
இளமைப் பருவமும் கல்வியும்
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸில் (Massachusetts) உள்ள கான்கார்ட் (Concord) என்னுமிடத்தில் பிறந்தார். ஹார்வர்டு கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல படைப்புகளை எழுதினார். உலக அளவில் பிரபலமான இவை அனைத்தும் சேர்த்து 20 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவர் எழுதிய 'வால்டன்' (Walden) என்ற புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது. நவீனகால சுற்றுச்சூழல் பற்றிய முக்கியமான புத்தகம் இது. சுற்றுச்சூழலியல் பற்றிய கருத்தாக்கங்கள் உருவாக, இந்தப் புத்தகம் வழிவகுத்தது. இந்தியாவின் கங்கை நதியைப் பற்றிய குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தியக் கலாசாரத்தை இவர் மிகவும் விரும்பினார்.
செயற்பாடுகள்
ஹென்றி டேவிட், அவருடைய படைப்புகளில் சுற்றுச்சூழலை அனுசரித்து வாழும் எளிமையான வாழ்க்கை முறையே சிறந்தது என்பதை முன்வைத்தார். டார்வினின் உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாட்டை ஆதரித்தார். தத்துவம், அரசியல், இயற்கையியல் சார்ந்த பல படைப்புகளை எழுதினார். செயற்படாத அரசுக்கு எதிராக, மக்கள் ஒத்துழையாமை என்ற உத்தியை இவர் வலியுறுத்தினார். மக்களை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், இவரைக் கிளர்ச்சிக்காரர் என அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கம் வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை; நல்ல அரசாங்கம் வேண்டும் என்றே கூறி வந்தார். 19ஆம் நூற்றாண்டின் சிறந்த தத்துவஞானியாக இவர் கருதப்படுகிறார்.
எழுதிய சில புத்தகங்கள்
Walden
On the Duty of Civil Disobedience
Slavery in Massachusetts
Life Without Principle
'உங்கள் நம்பிக்கையை வைத்து சுற்றுச்சூழலோடு இணைந்து முழுமையாக வாழுங்கள். உலகத்தையே உங்களால் புரட்டிப்போட முடியும்.'
- ஹென்றி டேவிட் தோரோ
- ப.கோபாலகிருஷ்ணன்
