PUBLISHED ON : நவ 04, 2019

தொல்லியலில் பல பிரிவுகள் உள்ளன. அவை, மேற்பரப்பு (Exploration) அகழாய்வு ஆராய்ச்சி (Excavation), காசுகள் பற்றிய ஆய்வு (Numismatics), கட்டடக்கலை (Art and Architecture), கல்வெட்டுகள் (Epigraphy) என்பனவாகும்.
மனித நாகரிகத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் (Pre Historic period),
வரலாற்றுக் காலம் (Historical Period)
அகழாய்வில் மண்ணின் நிறங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்நிறங்களைக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களின் காலம் நிர்ணயிக்கப்படும்.
மண்ணின் மூன்று வகைகள்
சாம்பல், அடர்த்தியற்ற கருப்பு, அடர்த்தியான சிவப்பு (செம்மண்) என, மண் மூன்று நிறங்களில் இருக்கும்.
சாம்பல் நிறம்
இது மண்ணின் மேலடுக்கு. 14ஆம் நூற்றாண்டு வரையிலான பொருட்கள், இந்தச் சாம்பல் நிற மண்ணில் கிடைக்கும். விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த பொருட்கள் இந்த அடுக்கில் கிடைக்கும்.
அடர்த்தியற்ற கருப்பு
சாம்பல் நிறத்துக்கு அடுத்துள்ள மண் இது. இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அங்கு புதைந்திருக்கும் பொருட்கள் அந்தக் காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பவை.
அடர்த்தியான சிவப்பு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பவை. வரலாற்றுக்கு முந்தைய கால மண், களிமண் மாதிரி இருக்கும். கிடைக்கும் பொருட்களில் எழுத்துகள் இருக்காது. கற்காலக் கருவிகள் கிடைக்கும்.
கன்னி மண்
மேலே குறிப்பிட்ட இந்த வகை மண்களுக்கு அடுத்து இருப்பதை, 'கன்னி மண்' என்கிறோம். இங்கே மனிதன் வாழ்ந்ததற்கான தடயம், சான்றுகள் ஏதும் இருக்காது.
ஆற்று மணல் மாதிரி இருக்கும். இதுதான் அகழாய்வு செய்வதற்கான மண் எல்லை. ஏறத்தாழ நான்கடிக்கு ஒரு நிறமாக மண்ணின் வண்ணங்கள் அமைந்திக்கும்.
- ஸ்ரீதரன்,
தொல்லியல் ஆய்வாளர் (ஓய்வு)
