PUBLISHED ON : ஏப் 25, 2016

'சிந்துநதியின் மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே '
என்ற பாரதியார் பாடலில் வரும் சிந்து நதி இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. சுதந்திரத்துக்கு முன் ஒன்றிணைந்த இந்தியாவிற்குள் ஓடியது.
சிந்து நதியை இந்து என்றும் குறிப்பிடுவார்கள். அந்த நதி பாய்ந்த நிலப்பகுதி இந்தியா.
சிந்து நதி இமய மலையில் தோன்றுகிறது. இதன் நீளம் 3,200 கி.மீ. ஆசியாவின் நீளமான நதிகளில் ஒன்று. பெருமளவு பாகிஸ்தானில் பாய்கிறது. இதன் சிறு பகுதி, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், திபெத்தில் குறுகிய அளவிலும் ஓடுகிறது. அரபிக் கடலில் சென்று கலக்கிறது.
இந்த நதியிலிருந்து ஜீலம் (jhelum), சீனாப் (Chenab) ராவி (Ravi), பியாஸ் (beas), சட்லஜ் (sutlej) என ஐந்து கிளை நதிகள் பிரிந்து செல்கின்றன.
சிந்து சமவெளி நாகரிகம் இந்த ஆற்றங்கரையில்தான் தோன்றியது. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்கள் இந்த நதிக்கரையில்தான் புகழோங்கி இருந்தன. இரண்டு நகரங்களும் மண்ணுக்கு அடியில் புதையுண்டு இருப்பது 1922ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கிடைத்த பானை ஓடுகள், முத்திரைகள் போன்றவற்றை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் சிந்து நதிக்கரையில் தமிழர்கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்கிறார்கள். நதிகள் இயற்கையின் வரம். அதைப் போற்றும் விதமாகத்தான் தேசத்திற்கே நதியின் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள், நம் முன்னோர்.
