PUBLISHED ON : டிச 05, 2016

தேசிய கீதம் (National Anthem - நேஷனல் ஆன்தெம்) என்பது, ஒரு பகுதி மக்களின் பண்பாடு, கலாசாரம், ஒற்றுமை உணர்வு, புரட்சியில் கிடைத்த சுதந்திரம், வெற்றி, ஆகியவற்றை பெருமையுடன் உணர்த்தும் வரிகளைக் கொண்டது. அந்த வரிகளுக்கேற்ற இசையை அமைத்து, மக்கள் பாடத் தொடங்கினார்கள்.
'நாடு' தேவையென்று, எல்லைகளைத் தீர்மானிக்கத் தொடங்கியபோது, அதற்கான தனி அடையாளத்தை வெளிப்படுத்த, தேசிய கீதம் என்பதை தகுதிச் சின்னமாக நிர்ணயித்தனர். தேசிய கீதம் இசைக்கத் தொடங்கினர். தேசியம் என்ற கருத்து, 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுப்பெற்றபோது, தேசிய கீதமும் முக்கியத்துவம் பெறத் துவங்கியது.
முதன் முதலில், 'ஃப்ரான்ஸிஸ் ஸ்காட்' என்பவர், 'ஸ்டார் - ஸ்பாங்கிள்ட் பானர்' என்ற தலைப்பில், ஒரு பாடலை எழுதினார். இதுதான் உலக நாடுகளில் எழுதப்பட்ட முதல் தேசிய கீதம் என, சொல்லப்படுகிறது. இதுதான் பின்னாளில், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஐரோப்பாவில், அந்தந்தப் பகுதி அரசர், அரசியை குறித்து, பாடல்கள் பாடப்பட்டன. இங்கிலாந்து நாட்டில், தேசத்தைப் பற்றிய பாடல் இல்லை. 'இறைவனே ராணியை காப்பாற்று'(God Save the Queen) என, ராணியைப் பற்றி பாடப்படுகிறது. இன்று வரை இங்கிலாந்து நாட்டில், முக்கிய அரசு, விளையாட்டு நிகழ்ச்சிகளில் இதுதான் பாடப்படுகிறது.
மெக்ஸிகோவில், தேசிய கீதம் இயற்றுவதற்கு, போட்டி நடத்தப்பட்டது. கவிஞர் ஃப்ரான்ஸ்சோ கான்ஸாஸை (Francicso González), அவரின் பெண் நண்பர் வற்புறுத்தி போட்டியில் பங்கெடுக்க வைத்துள்ளார். அவரை ஓர் அறையில் அடைத்துவைத்து, அறை முழுவதும், மெக்ஸிகோ நாட்டு புகைப்படங்களை ஒட்டிவைத்து, எழுதத் தூண்டியிருக்கிறார். அவ்வாறு, அறையில் அடைக்கப்பட்டவர் இயற்றிய பாடல்தான், அந்த நாட்டின் தேசிய கீதம்.
அதேபோல், செக்கோஸ்லோவாக்கியா நாடு 1918ல், உருவானது. அந்த நாட்டு தேசிய கீதத்தில், 'செக்கோஸ் ஓப்ரா' மொழியிலிருந்து முதல் பத்தியும், 'ஸ்லோவாகியா' மொழியிலிருந்து இரண்டாவது பத்தியும் சேர்த்து பாடலாக்கப்பட்டது. ஆனால், இந்த நாடு பிரிந்தபோது, செக் குடியரசு முதல் பத்தி பாடலையும், இரண்டாவது பத்தி பாடலை, ஸ்லோவாகியாவும் பிரித்துக் கொண்டன.
ஸ்பெயின் நாட்டில், வார்த்தைகளே இல்லாமல், வெறும் இசையை மட்டும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பின்போது, இசைத்து வந்தனர். பின்னாளில் இதுவே அந்த நாட்டின் தேசிய கீதமாக மாறியது.
* நெதர்லாந்து நாட்டு தேசிய கீதம் 15 கண்ணிகளைக் கொண்டிருக்கிறது. இதன் ஒவ்வொரு வரியின் முதல் வார்த்தையாக, டச்சு புரட்சியாளர் வில்லியம் வான் நாஸோவ் பெயர் இடம் பெற்றுள்ளது. பழமையான தேசிய கீதங்களில் இதுவும் ஒன்று.
* உகாண்டா நாட்டின் தேசிய கீதம் எட்டு வரிகளைக் கொண்டுள்ளது. இதுதான், மிகச் சிறிய தேசிய கீதம்.
* கீரிஸ் நாட்டின் தேசிய கீதம் தான் மிக நீளமானது.
* சைப்ரஸ் நாட்டுக்கு, தனியான தேசிய கீதம் கிடையாது. கிரீஸ் நாட்டின் தேசிய கீதம்தான், சைப்ரஸ் நாட்டிலும் பாடப்படுகிறது.
* தென் ஆப்பிரிக்கா தேசிய கீதத்தில், ஐந்து மொழிகள் உள்ளன.
* ஜப்பான் தேசிய கீதம் இயற்றியது யாரென்று தெரியாது. இப்பாடல் பழைய ஜப்பானிய வார்த்தைகளைக் கொண்டது. இதுவும் பழமையான தேசிய கீதங்களுள் ஒன்று.
* நாடுகளில் தேசிய கீதம் இசைக்கும்போது, கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்களும் சுவாரசியமானவை. நம் நாடடுப் பள்ளிகளில் இருப்பது போலவே, மெக்ஸிகோவில் திங்கட்கிழமைகளில், வெள்ளை நிற சீருடை அணிந்து, காலையில் தேசிய கொடிக்கு முன் நின்று, தேசிய கீதத்தை மாணவ, மாணவியர் இசைக்க வேண்டும்.
* இத்தாலி நாட்டில், அரசு விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் மட்டும், தேசிய கீதம் இசைத்தால் போதும்.
* தாய்லாந்து நாட்டில், தேசிய கீதத்தின் மீது, தீராத பற்று உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8:00, மாலை 6:00 மணி ஆகிய நேரங்களில், தொலைக்காட்சியில தேசிய கீதம் ஒளிபரப்பப்படும். அரசு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் ஆகியவற்றிலும் ஒலிக்கப்படும். இது சட்டமாக இல்லை என்றாலும், இன்றளவும் மக்கள் உணர்வோடு நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
