PUBLISHED ON : மே 22, 2017
எந்த விஷயத்தையும் செய்து முடிக்க, பயம் தடை உணர்ச்சியாக இருக்கிறது. தயக்கத்தோடும், அச்சத்தோடும் ஈடுபடும்போது, நம் தன்னம்பிக்கையின் அளவு குறைகிறது. பயம் என்பதும் ஓர் உணர்ச்சிதான். அதிலிருந்து மீண்டு, துணிச்சலோடும், பகுத்தறிவோடும் செயலாற்றுபவரா நீங்கள் என்பதை ஒரு எளிய கேள்வி பதில் மூலம் அறிந்துகொள்ளலாம். உங்களுக்கு எந்த அளவு பய உணர்ச்சி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோமா?
* தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள கீழே உள்ள கேள்விகளைப் படியுங்கள்.
* ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று விடைகள் உள்ளன.
* உங்களுக்குப் பொருத்தமான விடை எதுவோ அதை 'டிக்' செய்யுங்கள். (கவனிக்கவும். எது சரியான விடை என்று கேட்கவில்லை. எது உங்களுக்குப் பொருத்தமான விடை என்றுதான் கேட்கிறோம்).
* உங்கள் பதில்களுக்கான மதிப்பெண்கள் கடைசியில் உள்ளன.
* மொத்தம் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு, உங்களைப் பற்றிய ஒரு முடிவுக்கு நீங்கள் வரலாம்.
* அதற்கு உதவ எங்கள் கருத்துகளையும் கடைசியில் கூறியிருக்கிறோம்.
1. ஆவி, பேய் போன்றவற்றில் நம்பிக்கை உண்டா?
அ) நிச்சயமாகத் தெரியவில்லை. ஒருவிதக் குழப்பம் இருக்கிறது.
ஆ) ஆவியாவது, பேயாவது. சிரிப்புதான் வருகிறது.
இ) நிறைய உண்டு. நினைத்தாலே நடுங்குவேன்.
2. சீனா, நம் மீது போர் தொடுக்கத் தயார் என்பதுபோல் ஒரு செய்தியைப் படிக்கிறீர்கள். என்ன தோன்றும்?
அ) போர் என்று நினைத்தாலே கிலியாக இருக்கிறது.
ஆ) நல்லவேளை நான் தென்னிந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறேன்.
இ) எதிர்கொள்ள வேண்டியதுதான். வருங்காலத்தில் நானே கூட ராணுவத்தில் சேரத் தயார்.
3. குடும்பத்தோடு வேனில் சுற்றுலா செல்கிறீர்கள். ஒரு காட்டுப் பாதை வழியாகப் போனால் போக வேண்டிய இடத்துக்கு சீக்கிரமாகச் சென்று விடலாம் என்கிறார் அப்பா. நீங்கள் என்ன சொல்வீர்கள்?
அ) எதற்கு வம்பு? நேரம் அதிகமானாலும், பாதுகாப்பான வழியில்தான் போக வேண்டும் என்பேன்.
ஆ) கொடிய மிருகங்கள் எதுவும் அந்தப் பாதையில் எதிர்படாது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, காட்டுப் பாதையில் போகலாம் என்பேன்.
இ) காட்டுப் பாதையா? ஜாலி. வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
4. தனியாக இருக்கும் பக்கத்து வீட்டுச் சிறுவன், தன் வீட்டில் ஒரு பாம்பைப் பார்த்ததாகச் சொல்லி, உங்கள் உதவியை நாடுகிறான். என்ன
செய்வீர்கள்?
அ) கையில் ஒரு தடியுடன் அந்த வீட்டுக்குக் கிளம்புவேன்.
ஆ) எனக்கு அவசர வேலை இருக்கிறது என்றபடி தட்டிக் கழித்துவிடுவேன்.
இ) கூட சிலரை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் செல்வேன்.
5. சாலை விபத்தில் மாட்டிக் கொண்டு உயிரிழப்பதைப் போல உங்களுக்கு ஒரு கனவு வருகிறது. விழித்துக் கொண்ட பிறகு எப்படி இருக்கும்?
அ) கொஞ்ச நேரம் பதற்றமாக இருக்கும். பிறகு சரியாகிவிடும்.
ஆ) கனவுதானே. எந்த பாதிப்பும் இருக்காது.
இ) அதற்கு அடுத்த சில நாட்களுக்கு, மனதில் ஒரு சங்கடமும், பயமும் இருந்து கொண்டே இருக்கும்.
6. ஒரு வெகு பயங்கரமான திகில் படத்தை நீங்கள் மட்டுமே திரையரங்கில் உட்கார்ந்து பார்க்க வேண்டுமென்றால் ஒத்துக் கொள்வீர்களா?
அ) எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவும் ஒரு த்ரில்தானே.
ஆ) ஐயோ, நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்குகிறது.
இ) என் பக்கத்தில் யாரும் இல்லையென்றாலும் வேறு வரிசைகளிலாவது சில பார்வையாளர்கள் இருக்க வேண்டும்.
விடைகள்
அ ஆ இ
1. 4 0 8
2. 8 4 0
3. 8 4 0
4. 0 8 4
5. 4 0 8
6. 0 8 4
* உங்கள் மொத்த மதிப்பெண் 40லிருந்து 48 வரை என்றால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று, உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் சொல்லி வைத்தார்கள். வாழ்க்கை முழுவதுமே பயத்தில் கழித்து விடாதீர்கள்.
* உங்கள் மொத்த மதிப்பெண் 20லிருந்து 39 வரை என்றால், அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பவரோ நீங்கள்? கோழையல்ல. என்றாலும் துணிச்சல்காரர் என்றும் சொல்லிவிட முடியாது. சில விஷயங்களில் அசட்டுத் துணிச்சலைவிட பாதுகாப்புக் கோணம் நல்லதுதான்.
* உங்கள் மொத்த மதிப்பெண் 20க்கும் குறைவு என்றால் பயம்தான் உங்களைக் கண்டு பயப்படும். உங்கள் துணிவுக்குப் பாராட்டுதல்கள். என்றாலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
பயம்... பயம்... பயம்...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பய உணர்வு உண்டு. அதிலும் சிலரின் பய உணர்வுகள் பிறரையும் பயம் கொள்ளச் செய்யும். அந்த வகையில் சில வித்தியாசமான பய உணர்வுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்!
1. 'அகைரோபோபியா' (Agyrophobia)
சாலையைக் கடப்பதற்கான பயம்
2. 'பேடியோபோபியா' (Pediophobia)
பொம்மைகளைப் பார்த்தால் பயம்
3. 'டெயிப்னோபோபியா' (Deipnophobia)
சாப்பிடும்போது பேசுவதற்கு பயம்
4. 'எயிசோப்ட்ரோபோபியா' (Eisoptrophobia)
கண்ணாடியைப் பார்த்து பயம்
5. 'ஆட்டோமடோனோபோபியா' (Automatonophobia)
வாயசைக்கும் பொம்மையைப் பற்றிய பயம்
சரி, இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, உங்களுக்கும் இது போன்று ஏதாவது ஒரு பய உணர்வு உண்டா? இருந்தால் அதைக் கட்டாயம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!
- ஆருத்ரன்
