PUBLISHED ON : ஜூன் 27, 2016

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் 15 மீட்டர் நீளமுடைய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் நத்தை ஒன்று ஏறிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு நாள் பகலிலும் 5 மீட்டர் மேல்நோக்கி ஏறும். அதுபோல, ஒவ்வொரு நாள் இரவிலும் 4 மீட்டர் கீழ்நோக்கிச் சறுக்கிவிடும். இவ்வாறு, நத்தை ஒவ்வொரு நாளும் ஏறினால், எத்தனை நாட்களில் மரத்தின் உச்சியை சென்றடையும்? யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா?
விடை: 11 நாட்கள்
விளக்கம்: சராசரியாக ஒவ்வொரு நாளும் நத்தை (5-4=1) 1 மீட்டர் ஏறுகிறது. எனவே 15 மீடர்ட் நீளமுடைய மரத்தின் உச்சியை அடைவதற்கு 15 நாட்கள் தேவைப்படும் என நீங்கள் கணக்கிட்டு இருந்தால், அது தவறு. 10வது நாள் முடிவில், 10 மீட்டர் சென்றிரக்கும் நத்தை, 11வது நாளன்று 5 மீட்டர் உயரம் மேலே ஏறும் பொழுதே உச்சியை அடைந்து இருக்கும். உச்சியை அடைந்த பிறகு அது கீழே சறுக்கி வர வாய்ப்பில்லை. எனவே நத்தை, 11 நாட்களில் மரத்தின் உச்சியை அடைந்துவிடும்.
இது போன்ற தர்க்கரீதியான புதிர்களே அதிகளவில் ஐ.ஏ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுகின்றன.
இரா செங்கோதை, கணித ஆசிரியை, 'பை' கனித மன்றம்
