PUBLISHED ON : மார் 26, 2018

பசிபிக் பெருங்கடலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருவதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் குப்பைகளில் 79 சதவீதம், கடலைச் சென்றடைகின்றன.
இந்தக் குப்பைகள், கடலில் மலைபோலக் குவிகின்றன. அவை, கார்பேஜ் பேட்ச் (Garbage Patch) என அழைக்கப்படுகின்றன. வடக்கு பசிபிக் கடல், தெற்கு பசிபிக் கடல், தெற்கு அட்லான்டிக் கடல், வடக்கு அட்லான்டிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய ஐந்து கடல்களில் கார்பேஜ் பேட்ச்-கள் அமைந்துள்ளன.
இதில், பசிபிக் கடலில், ஹவாய் தீவுகளுக்கும் கலிபோர்னியாவுக்கும் இடையில் மட்டும், 1.8 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி), அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் மிதக்கின்றன. இவற்றின் எடை 80 ஆயிரம் மெட்ரிக் டன். சுமார் 16 லட்சம் சதுர கி.மீ. அளவுக்கு இந்தக் குப்பைகள் பரவியுள்ளன. இந்தக் குப்பைகளில், 92 சதவீதம் பெரிய பிளாஸ்டிக் பொருட்கள். 8 சதவீதக் குப்பைகள், 5 மில்லிமீட்டருக்கும் சிறியவை.
இதைவிடக் கவலை தரும் விஷயம், இங்கு குப்பைகள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதுதான். 'தி ஓசன் கிளீன் அப் ஃபவுண்டேஷன்' நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்தக் குப்பைகளை, உணவு என நம்பி உண்ணும் மீன்கள், கடல் பறவைகள் உயிரிழக்கின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இப்பிரச்னை பெரிதும் கவலையுறச் செய்துள்ளது.பசிபிக் கடலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை மட்டும் முழுமையாக அகற்ற, 79 ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படுமாம்.

