
உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் தீபக் புனியா (86 கி.கி.) தங்கப் பதக்கம் வென்றார். ஐரோப்பிய நாடு எஸ்தோனியாவில், உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் ஆண்களுக்கான 'ஃப்ரீஸ்டைல்' 86 கி.கி. எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா, ரஷ்யாவின் அலிக் ஷெப்ஜுகோவ் மோதினர். முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது. கடைசிப் புள்ளி பெற்ற வீரர் என்ற அடிப்படையில் தீபக் புனியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதன்மூலம் இத்தொடரில் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன், 2001இல் இந்தியாவின் ரமேஷ்குமார் (69 கி.கி.), பால்விந்தர் சிங் சீமா (130 கி.கி.) ஆகியோர் தலா ஒரு தங்கம் வென்றிருந்தனர். தீபக் புனியா, 2016இல் நடந்த உலக 'கேடட்' மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார்.

