PUBLISHED ON : அக் 15, 2018

பெங்களூருவில் உள்ள நாராயணா ஒலிம்பியாட் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார் நிதி மயூரிகா, வயது 15. இவர் நாசாவின் ஏம்ஸ் ஸ்பேஸ் செட்டில்மென்ட் (Ames space settlement) போட்டியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அவரது கனவுகளுக்கும், கணக்குகளுக்கும் வானமே எல்லையாக உள்ளது. விண்வெளி தொடர்பான அத்தனை வார்த்தைகளையும் விரல்நுனியில் வைத்திருக்கிறார் நிதி மயூரிகா.
அவரிடம் பேசியதிலிருந்து...
“ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, பள்ளி அளவிலான விண்வெளி அறிவியல் போட்டிகளில் பங்கேற்றேன். நட்சத்திரங்கள், பிரபஞ்சம் எப்படித் தோன்றியிருக்கும் என்பன குறித்து, ஆவலாய் கேள்வி கேட்பேன். எனது ஆர்வத்தைப் பார்த்த, என் பள்ளி முதல்வர் தான், நாசா ஏம்ஸ் ஸ்பேஸ் செட்டில்மெண்ட் போட்டி (ASSC) பற்றிச் சொன்னார்.
இதையடுத்து, 2016இ-ல், நாசா போட்டியில் பதிவு செய்தேன். 'மெய்நிகர் விண்வெளி குடியேற்றம்' என்பதுதான் போட்டியின் தலைப்பு. இதற்காகத் தினமும் இரண்டு மணிநேரம் முன் தயாரிப்பில் ஈடுபட்டேன். எடின்பர்க், பாஸ்டன், ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகங்களின் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து, வானுயிரியல் குறித்துத் தெரிந்து கொண்டேன். இந்த முயற்சியில், எனது குடும்பத்தினர் மற்றும் இயற்பியல் ஆசிரியரின் பங்கு முக்கியமானது.
அதில், சைகதம் (Saikatam) என்ற கருத்தை முன்வைத்தேன். சைகதம் என்றால், குடியிருப்புக்கு அப்பாலிருக்கும் புதிய குடியிருப்பு என்று பொருள். அக்குடியிருப்பு, பிரமாண்ட மூன்றடுக்கு விண்கலம். அதில், சுவாசிக்கத் தேவையான காற்று, செயற்கை ஈர்ப்பு, நீர், உணவு என மனிதர்கள் வாழத் தேவையான அனைத்தும் இருக்கும். போட்டியில் முதற்பரிசு கிடைத்தது. அடுத்த ஆண்டு நடந்த போட்டியில், 'சோஹம்' (Soham) என்கிற கருத்தை முன்வைத்தேன். இது பூமியில் இருந்து 350 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ள விண்வெளிக் குடியேற்றமாகும். இங்கிருந்தபடி செயற்கைக்கோளைத் தயாரித்து, ஏவலாம். இதற்கும் முதற்பரிசு கிடைத்தது.
இந்த ஆண்டு சுவஸ்திகம் (Swastikam) என்ற கருத்தை முன்வைத்தேன். இது, புதிய சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு, செயற்கை உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் விண்வெளிக் குடியேற்றம். கதிர்வீச்சு, வெப்பம், தொடர் பகல் வெளிச்சம், புவியீர்ப்பின்மைக்கு உயிரினங்கள் பழகிக்கொள்ளும். இதற்கும் முதற்பரிசு கிடைத்துள்ளது. இந்தியர்களான நாம், அணுக் கோட்பாடு, சூரியக் குடும்பம் என, பல சித்தாந்தங்களை நமது அபாரமான கற்பனைச் சக்தியாலேயே நிரூபணம் செய்துள்ளோம். இவ்வளவு பெருமைமிக்க இந்தியாவை, உலக அரங்கில் பிரபஞ்சவியலாளராக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே என் கனவு, விருப்பம் எல்லாம்”.
நம்பிக்கை தெறிக்கப் பேசுகிறார் நிதி மயூரிகா.
