PUBLISHED ON : அக் 15, 2018

2013இல் நிறுவப்பட்டது கிட்ஸ்பிரனர். 7 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான, ஆசியாவின் முதல் தொழில்முனைவுக் கல்விக்கூடம். மாணவப் பருவத்திலேயே, அவர்களுக்குத் தொழில்முனைவுப் பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள கிட்ஸ்பிரனர், தமிழகம் முழுவதும் 70 பள்ளிக்கூடங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. 'புதிதாக தொழில்முனையும் எண்ண ஓட்டத்தையும், பயிற்சியையும் சிறுவர்களுக்கு ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும். அப்போது தான், தங்கள் கனவை நிஜமாக்குவதற்குரிய தன்னம்பிக்கையையும் திறமைகளையும் அவர்களால் பெற முடியும்' என்று சொல்கிறார், கிட்ஸ்பிரனர் நிறுவனர் மோகனலட்சுமி. அந்த நிறுவனத்தின் நோக்கம், செயற்பாடுகள் குறித்து மோகனலட்சுமியிடம் பேசியதிலிருந்து...
எப்படி இதை ஆரம்பித்தீர்கள்?
தொலைதூரக்கல்வி முறையில் இளநிலைக் கல்வி முடித்த பின்னர், சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தேன். அங்கு எம்.பி.ஏ.விற்கான பிராஜக்டில், 'சிறார்களுக்குத் தொழில் கற்றுக்கொடுப்பது' பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டேன். எனக்கே இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சிங்கப்பூர் கல்வித்துறை எனது திட்டத்தை அந்நாட்டில் நடைமுறைப்படுத்த உதவி செய்வதாகக் கூறியது.
மூன்றாண்டுகள் உழைப்பின் தொடர்ச்சியாக, சிறுவர்களுக்குத் தொழில்முனைவுப் பயிற்சி அளிக்கும் திட்டம், சிங்கப்பூரில் பாடமாகக் கொண்டுவரப்பட்டது.
'கிட்ஸ்பிரனர்' ஏன்?
இந்தியாவில், நிறுவனங்களுக்குக் கீழ்படிந்த பணியாட்களைத் தயார் செய்யும் கல்விமுறையே உள்ளது. ஆனால், தொழில்முனைவோர் அதிகம் தேவையுள்ள நாடு இந்தியா. நம் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவரவே, 'கிட்ஸ்பிரனர்' நிறுவனத்தைத் தொடங்கினேன். ஒருவரை இளம் வயதிலேயே பழக்கப்படுத்தினால், அவரால் சிறந்த தொழில்முனைவோராக முடியும் என்பதுதான் அதன் அடிப்படை.
எப்படிப் பயிற்றுவிக்கிறீர்கள்?
வாரக் கடைசி நாட்களில் பிசினஸ் மையங்களில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம் அல்லது பள்ளியுடன் இணைந்து பாடங்களுள் ஒன்றாகச் சொல்லித்தருகிறோம். இதில், மாணவர்களுக்கு ரிஸ்க் எடுப்பது, சுயசிந்தனை, பணத்தைக் கையாள்வது தொடங்கி ஒரு தொழிலை எப்படி வெற்றிகரமாக நடத்தி வளர்த்தெடுப்பது என்பது வரை சொல்லித் தருகிறோம். நாங்கள் வெறுமனே புத்தகத்தில் உள்ளதை மட்டும் போதிப்பதில்லை. சிறுவர்கள் தங்கள் எண்ணத்தைச் செயற்படுத்திப் பார்ப்பதற்கு உரிய சூழலையும், வாய்ப்பையும் அவர்களுக்கு உருவாக்கித் தருகிறோம்.
பெற்றோர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
ஆரம்பத்தில், 'சிறுவர்களுக்குத் தொழிற்பயிற்சி ஏன் அவசியம்?' என்பதை பெற்றோர் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம். சிறுவயதிலேயே தொழில் ஆர்வம் வந்துவிட்டால், படிப்பு என்னாகும் என்று பெற்றோர் கவலைப்படக்கூடும். ஆனால், படிப்போடு சேர்த்துத்தான் தொழிலையும் கவனித்துக் கொள்ளும் வகையில் பயிற்சியை அமைத்துள்ளோம். இதைப் பெற்றோர் புரிந்துகொண்டவுடன், பலரும் எங்களைத் தேடி வருகின்றனர்.
மாணவர்களுக்கு என்ன பயன்?
எங்களிடம் பயிற்சிபெற்ற, 400க்கும் அதிகமான மாணவர்கள், மாதம் பத்தாயிரத்தில் இருந்து மூன்று லட்சம் வரை பணத்தைக் கையாள்கிறார்கள். தங்கள் கம்பெனிக்குப் பெயர் வைப்பதில் இருந்து, வரவு செலவு கணக்குப் பார்ப்பது வரை எல்லாமே அவர்கள்தான். குறிப்பாக, தோல்வி பயம் அவர்களுக்கு இல்லை. பணம் சம்பாதிக்கும் தொழில்களை மட்டும் தொடங்க மாணவர்களை ஊக்குவிப்பதில்லை; பிற மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கட்டுவது போன்ற சமூக காரியங்களுக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்துகிறோம்.
