PUBLISHED ON : ஜூன் 27, 2016

ஸ்குவாட்ரண் லீடர் ராகேஷ் சர்மா. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர். இது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளியில், வேதியியலின் முக்கியமான சோதனைகளைச் செய்த வேதி விஞ்ஞானி இவர். இது விஞ்ஞானிகளுக்கே அவ்வளவாகத் தெரியாத செய்தி.
விண்வெளி ஆராய்ச்சியில் தற்போது அமெரிக்காவின் நாசா மையம் முன்னிலை வகிப்பது போல, அந்தக் காலத்தில் சோவியத் யூனியனின் விண்வெளி ஆராய்ச்சி மையம் முன்னிலை வகித்தது. இந்த மையம், இன்டர் காஸ்மாஸ் (Inter Kosmoss) என்ற திட்டத்தின் கீழ், சோவியத் நட்பு நாடுகளின் பிரஜைகளை விண்வெளிப் பயணத்திற்கு அழைத்து சென்றது. அந்தத் திட்டத்தில் பங்கெடுக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டார் ராகேஷ் சர்மா.
இவர் அடிப்படையில் வேதியியலைப் பாடமாக எடுத்துப் படித்தவர். இந்திய விமானப் படையில் விமானியாகப் பணியாற்றினார். இவரது விண்வெளிப் பயணம் 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கியது. இவர் விண்வெளியில் இருந்தது மொத்தம் 7 நாட்கள், 21 மணிநேரம் 40 நிமிடங்கள். இந்தக் குறுகிய காலத்தில், மொத்தம் 43 வேதியியல் ஆய்வுகளில் சர்மா பங்கெடுத்து இருக்கிறார். அவற்றில் முதன்மையானது என்று போற்றப்படுவது, உலகின் முதல் விண் உலோகக் கலவைவை உருவாக்கிய ஆய்வு.
ஒரே கொதிநிலை உடைய இரு உலோகங்களைக் கலந்து, ஒரு உலோகக் கலவையைப் புவியில் உருவாக்கும்போது, எந்தப் பாத்திரத்தில் வைத்து அந்த உலோகக் கலவை உருவாக்கப்படுகிறதோ, அந்த பாத்திரத்தின் தன்மையையும் அது சேர்த்துப் பெற்றுவிடும். ஈர்ப்பு விசையற்ற வானவெளியில், இரு உலோகங்களைப் பாத்திரத்தில் வைத்துக் கலக்காமல், மிதக்கவிட்டுக் கலக்கும் ஆய்வை நிகழ்த்தினார் சர்மா.
இவ்வாறு வெள்ளி, ஜெர்மானியம் ஆகிய உலோகங்களைக் கலந்து, 'வெள்ளி ஜெர்மானிய விண் கலவை' என்ற புதிய கலவையை உருவாக்கினார். இதுதான் உலகின் முதல் விண் உலோகக் கலவை. இது புவியில் உருவாகும் கலவையைவிட மாறுபட்ட வேதியியல் மற்றும் சிறப்புப் பண்புகளை பெற்றிருக்கிறது. குடுவைப்பாத்திரத்தின் உதவி இல்லாமல் செய்யப்பட்ட உலகின் முதல் வேதியல் ஆய்வும் இதுதான்!
சாதனைக்குள்ளே இவ்வளவு சாதனைகள்!
