PUBLISHED ON : செப் 09, 2019

நீதி நூல்களைப் போலவே, சதகங்கள் மக்களுக்குத் தேவையான அறக்கருத்துகள், நற்செயல்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. சதம் என்பது வடசொல். அது 'க' கரம் பெற்றுச் சதகம் என்றாயிற்று. சதகமாவது நூறு செய்யுட்களால் ஆக்கப்பட்ட நூல் என பொருள் தரும். 'குமரேச சதகம்' ஒரு மனிதனுக்கு நோய் உண்டாகும் வழிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது.
சாப்பிடும் உணவில் கல், தலைமுடி கலந்திருத்தல்,
அளவுக்கு மீறி உண்ணுதல், சிறுநீர், மலத்தை அடக்குதல்,
வெம்பிய பழம், காய்கறிகளை உண்ணுதல்,
நெல்லும் உமியும் கலந்த உணவை உணணுதல்,
சாப்பிட்டபின் குளிப்பது,
சரியான உறக்கம் இல்லாமலிருத்தல் அல்லது தூங்காமை,
தரமற்ற நீரில் குளித்தல்,
பனிக்காலத்தில் அலைதல்,
சுத்தமற்ற இலைதழைகள் மிதக்கும் நீரை அருந்துதல்,
அதிக எடையுள்ள பொருட்களை சுமத்தல் அல்லது தூக்குதல்,
காலை வெயிலில் அலைதல்,
இரவில் கீரை, மோர் உண்ணுதல்,
இவை அனைத்தும் நோயை உண்டாக்கும் என்கிறது.
தற்பெருமை கொண்டவன், பெரியோரின் அறிவுரை கேளாதவன், நண்பர்களிடம் கவலையும் குறையும் கூறுபவன், பெற்றவர்களைத் துன்பத்தில் விடுபவன், தன்னிடம் பொருள் இருக்கக் கையேந்துபவன், பொய் தீர்ப்புக் கூறுபவன், நன்கு வாழ்பவர்களைப் பழிகூறுபவனை, மக்களில் 'பதர்' என்கிறது இந்தச் சதகம்.
அறப்பளீச்சுர சதகம், நல்ல ஒழுக்கத்தைக் கற்பிக்காத முடியாத கல்வி, சிறுவர்கள் இல்லாத வீடு, புலவர்கள் இல்லாத சபை, ஒழுக்கம் இல்லாத வழிபாட்டு முறை, உப்பில்லாத உணவுப்பொருள் பயனற்றவை என்கிறது.
தண்டலையார் சதகம் என்றொரு நூல். அதில், மேட்டு நிலத்தில் தூவிய விதை சோம்பேறிக்கு செய்த உதவியைப் போலாகும். காட்டிற்குள் ஒளிகொடுக்கும் நிலவு, கடல் அருகே பெய்யும் மழை பயனற்றவை என்று குறிப்பிடுகிறது.
'மேட்டுக்கே விதைத்த விதை வீணருக்கே
காட்டுக்கே எறித்த நிலா கானலுக்கே
பெய்த மழை கடுக்கும் தானே'
என்பதே அந்தப் பாடல்.
- க. அன்பழகன்
