
நரி பற்றி நிறைய கதைகள் படித்திருப்போம், கேட்டிருப்போம். அவை தந்திரம் மிக்கவை, புத்திசாலி என்றெல்லாம். உண்மையில் நரியின் இயல்புதான் என்ன?அவை எப்படி வாழ்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாமா!
நரி பாலூட்டி வகையைச் சேர்ந்த அனைத்துண்ணி விலங்கு. ஆசியா, ஐரோப்பா, வட ஆப்ரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் காணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் தான் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டது.
நடுத்தர நாயின் அளவிலேயே எல்லா வகையான நரிகளும் இருக்கும். ஆனால் பெனெக் (Fennec fox) வகையைச் சேர்ந்த நரி மட்டும் பூனையின் அளவே இருக்கும்.
நரிகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. இரவு நேரங்களில் வேட்டையாடும். பகலில் உறங்கும். இவைகள் எந்த இடத்தில் வசிக்கிறதோ அதையொட்டியே, அதன் வேட்டையாடும் தன்மையும் மாறுபடும். பூனையைப் போலவே இரவு நேரங்களில் நரிகளால் பார்க்க இயலும். இதன் செவிகள், பூமிக்கடியில் எலி போன்ற உயிரிகள் எழுப்பும் சத்தத்தையும் கேட்கும் திறன் படைத்தவை.
நரிகள் வெவ்வேறு வகையான குரல்களை அடையாளம் காணக்கூடியவை. மணிக்கு சுமாராக 72 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை.
பொதுவாக காடு, மலை, அடர்ந்த புல்வெளி, பாலைவனங்களில் வசிக்கக்கூடியவை . குகை(Dens) களிலும், பூமிக்கடியில் பள்ளம் தோண்டியும் வசிக்கக் கூடியவை. உணவு சேமித்து வைக்கவும், குடும்பத்தோடு உறங்கவும் மண்ணில் அறைகளை ஏற்படுத்திக்கொள்கின்றன. ஆபத்து வந்தால் தப்பித்து வெளியேற பல வெளிவாசல்களையும் இவை அமைத்துக்கொள்கின்றன.
நரி, 2லிருந்து 7 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் படுக்க, தாய் நரி இலைகளை பரப்பி வைக்கும். குட்டிகளை தாயும், தந்தையும் சேர்ந்து பராமரிக்கும். சில நேரங்களில் மூத்த சகோதர, சகோதரிகளும் உணவு கொண்டு வந்து கொடுக்கும். சிறியவகை விலங்குகளான எலி, பல்லி, பறவை, முயல், அணில் இவற்றின் உணவு. பழங்களையும் உண்ணும். இதன் வசிப்பிடம் கடலோரமென்றால் நண்டு, மீன்களையும் சாப்பிடும்.
இதன் சராசரி வாழ்நாள் 3 வருடங்கள். வனவிலங்கு பூங்காக்களில் 10 லிருந்து 12 வருடங்கள் வாழும் என்று சொல்லப்படுகிறது.

