
ஔவையாருக்கு அதியமான் நெல்லிக்கனியைக் கொடுத்த கதை, நம் எல்லோருக்கும் தெரியும். நூறாண்டு வாழ வைக்கக் கூடியது என்று சொல்லப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சத்துகள் உள்ளன.
நெல்லியில் முழு நெல்லி, அரை நெல்லி என இரு வகைகள் உண்டு. நெல்லி, கனி வகையைச் சேர்ந்தது என்றாலும், நாம் காய் என்றும் அழைக்கிறோம்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி, பி, தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீசு, புரதம், சுண்ணாம்புச் சத்து, நீர்ச்சத்து, இரும்புச் சத்துகள் இருக்கின்றன.
நெல்லிக்காயை ஜூஸ், ஊறுகாய், துவையல் என எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும், அதில் உள்ள வைட்டமின்கள் அழியாது. வேக வைத்தாலும், காய வைத்தாலும் அதில் உள்ள வைட்டமின்கள் அழியாத் தன்மை கொண்டவை.
புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது நெல்லிக்காய். பசியைத் தூண்டும். அஜீரணக்கோளாறை நீக்கும். ரத்தத்தை தூய்மைப்படுத்தும், சளியை போக்கும். வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை எதிர்க்கும். நரம்பியல் கோளாறுகளையும் வராமல் தடுக்கும்.
நெல்லி உடலை குளிர்ச்சியூட்டக்கூடியது. இதனால் மத்திய காலத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக இதைப் பயன்படுத்தினார்கள்.
ஆயுர் வேதம், யுனானி மருத்துவ முறைகளில் நெல்லிமரத்தின் இலை, பட்டை, காய், விதை அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காயை இந்தியில் ஆம்லா (Amla)என்றும் ஆங்கிலத்தில் கூஸ்பெர்ரி (Gooseberry) என்றும் அழைக்கிறார்கள்.

