PUBLISHED ON : அக் 18, 2016
பத்திரிகை என்னும் சொல் 'அச்சடிக்கப்பட்ட தாள்' என்னும் பொருளில் பயன்படுத்தப்படுவது. அதனால்தான் விழாக்களுக்காக அச்சடிக்கப்படுவனவற்றையும் பத்திரிகைகள் என்கிறோம். அதற்கு 'அழைப்பிதழ்' என்னும் அழகிய தமிழ்ச்சொல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இதழ்களைப் பற்றிக் குறிப்பிடும்போது பத்திரிகை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.
தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலை அடிகளாரின் மகளும், தமிழாசிரியருமான திருவாட்டி தி. நீலாம்பிகை அம்மையார் தொகுத்த, 'தமிழில் கலந்துள்ள வடசொல் அகரவரிசைச் சருக்கத்தில்' பத்திரிகை என்ற சொல்லையே குறிப்பிட்டுள்ளார். தமிழறிஞர் கொண்டல் சு. மகாதேவன் மேற்பார்வையிட்ட 'தமிழ் அகர முதலி' நூலிலும் 'பத்திரிகை' என்ற சொல்லே காணப்படுகிறது. இவ்விரண்டிலும் 'க்' இல்லை. இவையாவும் காலத்தால் முற்பட்டவை என்பதால் நம்பிக் கருதுவதற்குரியன.
பத்திரிகாசிரியர், பத்திரிகாதிபர், பத்திரிகாலயம் ஆகிய தொடர்களும் நாம் அறிந்தவையே. இவற்றுள்ளும் 'க்' இல்லை. ஆகவே, 'பத்திரிகை' என்று இடையில் 'க்' இன்றிப் பயன்படுத்துவதே சரியானது.
- காவிரி மைந்தன்
