PUBLISHED ON : அக் 14, 2016

இந்த ஒட்டுமொத்த சூரியக் குடும்பத்தில் நம் பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கின்றன. நமக்கு வெளியில் இருந்து தாக்குதல் அதிகம். 'Rogue planets' (ரோக் பிளானட்ஸ்) எனப்படும் அராத்துக் கோள்கள் திடீர் திடீரென்று பறந்து வரும். அதேபோல் பேரழிவை உண்டாக்கக் கூடிய விண்கற்கள் விண்வெளியில் நிறைய உண்டு. இவை அவ்வப்போது தாறுமாறாய் பூமியை நோக்கி வந்துகொண்டுதான் இருக்கின்றன. பல்லாயிரம் கிலோ எடையுள்ள இந்த விண்கற்கள் பூமியைத் தாக்கினால் பேரழிவு ஏற்படும். சுமார் 6.5 கோடி வருடங்களுக்கு முன்னர் ஒரு மிகப்பெரிய விண்கல் பூமியைத் தாக்கியதன் விளைவாக, டைனோசர்கள் உட்பட அப்போது பூமியில் இருந்த நான்கில் மூன்று பங்கு உயிரினங்கள் அழிந்ததாக புவியியலாளர்கள் சொல்கிறார்கள். இப்படி பூமியைத் தாக்க வரும் வான் பொருட்களில் பெரும்பாலானவற்றை நம் வியாழன் கோள், தன் ஈர்ப்பு விசையால் “எங்க போற! நில்லு” என்று இழுத்து, ஒரு சுழற்று சுழற்றி, பாதை மாற்றி அனுப்புகிறது. அதையும் தாண்டி ஒரு சில சமயம் வான்பொருட்கள் பூமியைத் தாக்குவதும் உண்டு; டைனோசர் அழிவு அப்படி நடந்ததுதான்.
வியாழன் கோள், பூமியைப் போல் 1,321 மடங்கு பெரிய கோள் என்பதால், ஒரு பெரிய விண்கல்லை அது எளிதில் சமாளித்துவிடும். கடந்த 1994ல் ஷூ மேக்கர் லெவி -9 (Shoemaker Levy -9) என்ற ஒரு பெரும் வால் நட்சத்திரம் உடைந்து, பல லட்சம் மைல்கள் நீளத்திற்கு அணிவகுத்து வந்தது. அப்போது நம் சகோதரக் கோளான வியாழன்தான், அவற்றால் அடிவாங்கிக் கொண்டு பூமியை சேதாரமின்றிக் காப்பாற்றினார். உயிர்கள் பல மில்லியன் ஆண்டுகளாக பூமியில் இருக்கிறது என்றால், அதற்கு விண்கற்களை வேறு பக்கம் அனுப்பி வைக்கும் வியாழனின் செயல்பாடும் ஒரு முக்கியக் காரணம். வியாழனை நினைத்து, 'அண்ணே/அக்கோவ் நன்றி!' என்கிறீர்களா?
- சிவா
