PUBLISHED ON : செப் 19, 2016

சாந்தி: மஞ்சு! நீ மஞ்சுதானா?
மஞ்சு: நீ சாந்திதான? இங்க வா. தலைல ஏதும் அடிபட்டிருக்கான்னு பாக்கலாம்.
சா: விளையாடாத. கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ மஞ்சுதான?
ம: ஆமாப்பா... ஆமா. நான்தான் மஞ்சு. உனக்கு என்னாச்சு. நேத்துவரைக்கும் நல்லாதான இருந்த?
சா: நான் நல்லாதான் இருக்கேன். நீ மஞ்சுதான்னு நிருபிக்க என்ன ஆதாரம் இருக்கு?
ம: அதான் ஸ்கூல் ஐடி கார்டு இருக்கே. வேற ஆதாரம் கேட்டா சேதாரம் ஆகிடும் பாத்துக்கோ.
சா: நீ ஒரு இந்தியக் குடிமகள். அதனால, 'ஆதார்'ங்கிற ஆதார அட்டை இருக்கா?
ம: இது சம்பந்தமா எந்த அதிகாரியும் வந்து என்கிட்டப் பேசல. அதனால நீ சொல்றதும் புரியல.
சா: ஆதார் என்பது இந்திய அரசோட சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண்.
ம: தனிநபர் அடையாளம் சரி. ட்வின்ஸ் யாராச்சும் இருந்தா குழப்பம் வருமே. அப்போ என்ன பண்ணுவாங்க?
சா: அதுக்குத்தான் பெயர், முகவரியோட சேர்த்து கண் பாவை, கைரேகை, முகம் போன்ற பயோமெட்ரிக் அடையாளங்களை வச்சு ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு தனித்துவமான ஐடி கொடுப்பாங்க.
ம: ஓ! அமெரிக்காவுல இருக்கே எஸ்.எஸ்.என். (SSN - Social Security Number) அதுமாதிரின்னு சொல்லு.
சா: ஆமா. இந்த அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். வங்கி சேவை, மொபைல், கேஸ் இணைப்பு மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகளைப் பெறவும் உதவியாக இருக்கும்.
ம: ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மாதிரி இருக்குற எல்லா அட்டைகளுக்கும் சேர்த்து பொதுவான ஒண்ணா இது இருக்குமா? ஏன்னா எத்தனை அட்டையதான் பத்திரமா வச்சுக்க முடியும்?
சா: அதுவும் சரிதான். ஆனா, ஆதார் அட்டை அவசியமா, இல்லையா? அப்படின்னு பெரிய வாக்குவாதமும் நடந்துக்கிட்டு இருக்கு.
ம: எல்லாம் சரி. நம்ம அரசாங்கம் கொடுக்குற இந்த அடையாள அட்டைலயாவது நம்ம முகம் நம்மள மாதிரியே இருக்குமா?
