PUBLISHED ON : செப் 26, 2016

மஞ்சு: மழைக்காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இந்த வருஷமும் வெள்ளம் வந்தா என்னடா பண்றது?
சங்கர்: வேணும்னா ஒரு கப்பல் வாங்கி வச்சுக்கோ. ஏன்டா இப்பவே பீதியக் கிளப்புற?
ம: என்னையத் திட்டாத. அலர்ட்டா இருக்குறதுல என்ன தப்பு?
ச: ஆமா... ஆமா... சாப்பாடு, மருந்து இப்படி அடிப்படை வசதிகள் கிடைக்காம பாதிக்கப்பட்டவங்க கஷ்டப்பட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம் அடைமழையும் ஏரி, குளங்களை தவறாகக் கையாண்ட விதமும்தான்.
ம: அட! மழையா? அடைமழையா? எதச் சொல்ற நீ?
ச: அடேய்... அடைமழைன்னா, அடைத்துப் பெய்யும் தொடர் மழை. இடைவிடாமல் நாள் முழுக்கப் பெய்துகொண்டிருக்கும்.
ம: ம்க்கும். ஒருநாள் பெஞ்சுட்டுப் போனாத்தான் பரவால்லையே. விருந்தாளிங்க நம்ம வீட்ல வந்து தங்குற மாதிரி 3 நாள் விடாமப் பெஞ்சு ஊர மூழ்கடிச்சதே.
ச: இயற்கையை எதிர்த்து மனுஷன் என்ன செய்ய முடியும்? ஏரி, குளங்களை ஆக்கிரமிச்சு கட்டடம் கட்டுனா, அதோட பலனை அனுபவிச்சுதான் ஆகணும்.
ம: மழைல ஐஸ்க்ரீம் தின்னா ஜன்னி வரும்; ஏரிக்குள்ள வீடு கட்டுனா மழைக்காலத்துல தண்ணி வரும்ங்கிற புதுமொழி தெரிஞ்சுமா இன்னும் இப்படிப் பண்றாங்க?
ச: எல்லாருக்கும் நகரத்துல வாழணும்னு ஆசை. அதான் எங்கே வீடு கட்டினாலும் கேள்வி கேக்காம காசு கொடுத்து வாங்கிக்கறாங்க.
ம: சென்னைக்கு மிக அருகில்னு விளம்பரப்படுத்தியே அந்தப் பக்கம் திருப்பதிக்கும் இந்தப் பக்கம் விழுப்புரம் வரைக்கும் ப்ளாட் போட்டாச்சு.
ச: கோவப்படாத முன்னா. நகர விரிவாக்கத்துல இந்த மாற்றங்கள் சகஜம். இருந்தாலும் நம்மாளுங்க கொஞ்சம் அதிகமாகவே ஊர விரிச்சுட்டாங்க.
ம: இந்த வருஷமாவது கால்வாய்களை தூர்வாருவது, வடிகால்களைச் சீரமைப்பது போன்ற வேலைகளை மாநகராட்சி நிர்வாகம் சீக்கிரமா செய்யணும்.
ச: “பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என்பதை, சென்னை மழை வெள்ளம் உணர்த்தி இருக்கிறது” என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் போன வருஷம் சொன்னாரு.
ம: நமக்கு எப்பவும் தண்ணிலதான் கண்டம்போல!
