ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, உலக மனித நேய நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா. அமைப்பு, கடந்த 2009ஆம் ஆண்டு முதல் உலக மனிதநேய தினத்தை அனுசரித்து வருகிறது. ஈராக்கில் நடந்த குண்டு வெடிப்பைப் பார்வையிட ஐ.நா.வைச் சேர்ந்த சிறப்பு பிரதிநிதி, செர்ஜியோ வியரா டெ மெல்லோ (Sergio Vieira de Mello) சென்றார். அச்சமயத்தில் ஐ.நா.விற்கும், ஈராக்கிலிருந்த சில அமைப்புகளுக்கும் தீவிரமான கருத்துவேறுபாடுகள் இருந்தன. இதன் விளைவாக நடந்த தாக்குதலில், செர்ஜியோ கொல்லப்பட்டார். அவர் நினைவாக ஆண்டுதோறும், மனிதநேய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மனிதநேயத்திற்கு வயது தடை அல்ல; இதற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற 12 வயதுச் சிறுவன் சிறந்த உதாரணம். ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஹிரேரயனாகும்பே கிராமத்தைச் சேர்ந்தவன் வெங்கடேஷ். அப்பகுதியில் பெய்த கனமழையால், அப்பகுதி வெள்ளத்தால் தத்தளித்தது. அதிகப்படியான வெள்ளப் பெருக்கால் அப்பகுதி முழுவதுமே நீரில் மூழ்கியது. அதிலும், அந்த ஊரின் பாலம் இருந்த இடமே தெரியாமல் தண்ணீருக்குள் மூழ்கியது.
அப்போது, அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் திக்குத் தெரியாமல் தவித்தது. அங்கே இருந்த சிறுவன் வெங்கடேஷ் வாகன ஓட்டுநருக்கு வழிகாட்டி உதவினான். ஆம்புலன்ஸ் எப்படி வர வேண்டும் என வழிகாட்ட, நீருக்குள் இறங்கி முன்னே நடந்து சென்றான். இச்சிறுவனின் இச்செயல் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, இணையம் வழியாக பலரால் பகிரப்பட்டது. இச்சிறுவனின் மனிதநேயமிக்க செயலை, அந்த மாவட்ட நிர்வாகம் சுதந்திர தினத்தன்று பாராட்டியது. மேலும், தேசிய அளவில் இவனுடைய வீரத்தை அங்கீகரிக்க விருது வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

