PUBLISHED ON : நவ 14, 2016

இந்திய அரசாங்கம், இரண்டாயிரம் ரூபாய்த்தாளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
நம் நாட்டுக்குத்தான் இது புதியது. ஆனால், மொரீஷியஸில் ஏற்கெனவே இரண்டாயிரம் ரூபாய்த்தாள் உண்டு.
ஆனால், ஓர் ஆச்சரியம், அந்தத் தாளில் 'இரண்டாயிரம்' என்று எழுதவில்லை, 'ஈராயிரம்' என்று எழுதியிருக்கிறார்கள். நம் நாட்டுத்தாளிலோ 'இரண்டாயிரம்' என்று எழுதியுள்ளார்கள். எது சரி?
ஒரு பொருள் இரண்டாக இருக்கிறது என்றால், அதைப் பலவிதமாக எழுதலாம். உதாரணமாக: 'இரண்டு மரங்கள், இரு மரங்கள்' என நாம் எழுதுகிறோம்.
ஆனால், ஒருவேளை அந்தப் பொருளின் பெயர், ஓர் உயிரெழுத்தில் தொடங்குகிறது என்றால், அதனை 'இரு' என்று எழுதக்கூடாது, 'ஈர்' என்று எழுதவேண்டும்:
இரண்டு + கைகள் => 'கை' என்பது உயிரெழுத்து அல்ல, ஆகவே, 'இரு கைகள்' என்று எழுதவேண்டும்.
இரண்டு + இமைகள் => 'இ' என்பது உயிரெழுத்து, ஆகவே, 'இரு இமைகள்' என்று எழுதாமல், 'ஈர் இமைகள்', அதாவது 'ஈரிமைகள்' என்று எழுதவேண்டும்.
தமிழில் 'ஈருருளி' என்று ஒரு சொல் உண்டு. அதற்கு என்ன பொருள் தெரியுமா?
ஈர் + உருளி, அதாவது, இரண்டு உருளி, உருண்டுசெல்லும் இரண்டு சக்கரங்களைக்கொண்ட வாகனம், உங்களுடைய சைக்கிள்தான்.
இரண்டு + உருளி => 'உ' என்பது உயிரெழுத்து, ஆகவே, 'ஈர் உருளி' => ஈருருளி
இதன்படி, இரண்டு + ஆயிரம் => 'ஆ' என்பது உயிரெழுத்து, ஆகவே, 'ஈர் ஆயிரம்', அதாவது 'ஈராயிரம்' என்று எழுதவேண்டும்.
இதை இன்னொரு வகையாகவும் சேர்க்கலாம்:
இரண்டு + ஆயிரம் => முதல் சொல்லாகிய 'இரண்டு' என்பதன் நிறைவில் இருக்கும் 'உ'கரம் கெடும், அது 'இரண்ட்' என்று மாறும்
இரண்ட் + ஆயிரம் => (ட் +ஆ= டா) இரண்டாயிரம்
ஆக, 2,000 ரூபாயை எழுத்தில் எழுதுவதென்றால், இரண்டாயிரம் என்று எழுதலாம், இரண்டு ஆயிரம் என்று எழுதலாம், ஈராயிரம் என்று எழுதலாம், இவை அனைத்தும் சரி, 'இரு ஆயிரம்' என்று மட்டும் எழுதக்கூடாது.
- என். சொக்கன்

