
வே. தில்லைநாயகம்
10.6.1925 - 11.3.2013
சின்னமனூர், தேனி.
நூல்கள் தகவல்களைத் தரும்; மன ஆறுதலைக் கொடுக்கும்; புத்துணர்ச்சி அளிக்கும்; அப்படிப்பட்ட நூல்களின் கருவூலமாக விளங்கும் பொது நூலகத் துறைக்கு, முதல் இயக்குநராகப் பதவியேற்று, 10 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். அவருடைய நிர்வாகத்தில், மாவட்டம்தோறும் நூலக ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டு, மாவட்ட மைய நூலகங்களும், மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் கிளை நூலகங்களும் ஏற்படுத்தப்பட்டன. மாவட்ட மைய நூலகங்களுக்கு இடம் வாங்கி சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும், மக்கள் பிரதிநிதிகள், கல்வியாளர்களைக் கொண்டு மாவட்ட நூலக ஆணையங்கள் அமைக்கப்பட்டன. நூலக வளர்ச்சியில் கவனம் செலுத்தி, புதிய நூலகங்கள் அமைப்பதற்கான நிதி உதவியையும் பெற்றுத் தந்தார் 'தமிழக நூலகத் துறையின் முன்னோடி' வே. தில்லைநாயகம்.
குழந்தை இலக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தார். குழந்தை இலக்கியப் படைப்பாளராகவும் இருந்தார். 40 ஆண்டுகளாக ஆராய்ந்து சேகரித்த தகவல்களை, 'இந்திய நூலக இயக்கம்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இவரது படைப்புகள் இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
மாணவப் பருவத்திலேயே, நூலகத் துறை மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியல், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் முதுகலை, மதுரை தியாகராசர் கல்லூரியில் கல்வி இளங்கலை, டில்லி பல்கலைக்கழகத்தில் நூலகவியல் முதுகலை படித்து முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பிரான்ஸ், ஜெர்மனி மொழிகளையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஜோதிடமும் பயின்றார். 1949ல் அரசு உதவியுடன் நூலகப் பயிற்சி பெற்று, பொதுக் கல்வித் துறை இயக்க முதல் நூலகராகவும், 1972ல் தமிழக அரசு பொது நூலகத் துறையின் முதல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவியில் இருந்த காலம், 'தமிழக நூலக இயக்கத்தின் பொற்காலம்'. இவர் 'தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை' என போற்றப்படுகிறார்.
தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்கள்
* நூலக உணர்வு
* வள்ளல்கள் வரலாறு
* இந்திய நூலக இயக்கம்
* 'இந்திய நூலக இயக்கம்' என்ற நூலைப் பாராட்டி, 1982ல் உலக பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.
* இவரின் 'குறிப்பேடு' நூல்தான், தமிழில் முதன்முதலாக வெளிவந்த ஆண்டுநூல்
(Year Book).

