PUBLISHED ON : ஜூலை 11, 2016

'மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும்தன் வாயால் கெடும்.'
இது பழமொழி நானூறில் இடம்பெற்றுள்ள கடைசி இரு வரிகள். நுணல் என்பது தவளையைக் குறிக்கும். தவளை வயல் வரப்புகளில் மறைந்து வாழ்ந்தாலும் சும்மா இருக்காது. அவ்வப்போது தன் கரகர குரலால் சத்தம் எழுப்பியபடி இருக்கும். இதனால் தவளையின் இருப்பிடத்தை அறியும் பாம்பு போன்ற உயிரிகள் தவளையை இனம் கண்டு தின்றுவிடுகின்றன.
தவளைக்கு சமஸ்கிருத மொழியில் 'மண்டூகம்'என்று பெயர். ஆங்கிலத்தில் Frog. இது frogga என்ற பழைய ஆங்கில வார்த்தையில் இருந்து வந்தது. அனுரா (Anura) குடும்பத்தைச் சேர்ந்தது. நீர், நிலம் இரண்டிலும் வசிப்பதால் இது இருவாழ்வியல் உயிரி (Amphibian -ஆம்பிபியன்) என்று அழைக்கப்படுகிறது.
இது சுவாசிப்பதும் இரண்டு விதங்களில்தான். நிலத்தில் இருக்கும்போது நுரையீரல் வழியாக சுவாசிக்கிறது. நீருக்கடியில் இருக்கும்போது செவுள்கள் (Gills) வழியாக சுவாசிக்கிறது.
ஒரே நேரத்தில் மேல் நோக்கியும், பக்க வாட்டிலும், முன்னோக்கியும் பார்க்கக் கூடியது தவளை. இன்னொரு ஆச்சரியமும் உண்டு. உறங்கும் பொழுதுகூட தவளை கண்களை மூடாது. காரணம், அதற்கு இமைகளே கிடையாது.
தொண்டைக் குழிக்குள் உணவை உட்தள்ளுவதற்கும் இதன் கண்கள் உதவுகின்றன. பசைத்தன்மை உள்ள நாக்கினால் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். நீரிலேயே வாழ்ந்தாலும் தவளை தண்ணீர் குடிப்பதில்லை. தோலின் நுண் துளைகள் வழியாக தேவையான நீரை எடுத்துக்கொள்கிறது.
