PUBLISHED ON : ஜூன் 25, 2018

பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து, மத்திய அரசு செயற்படுத்தி வந்தாலும், பொதுமக்களின் அலட்சியப் போக்கு முடிவுக்கு வந்தபாடில்லை. குப்பைகளைத் தொட்டியில் போடாமல், அதன் அருகே வெளியில் போடுவது, கண்ட இடங்களில் வீசியெறிவது வாடிக்கையாக உள்ளது.
சாலைகளில் குப்பை போடுவதால், பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், திடக்கழிவு மேலாண்மையிலும் சிக்கல் ஏற்படுகிறது. அந்தக் குப்பைகளை அள்ள, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கூடுதல் செலவும் சிரமமும் ஏற்படுகின்றன. இதையடுத்து, பொது இடங்களில் குப்பை போடுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது.
அதாவது, குப்பையைக் கண்ட இடங்களில் வீசி எறிந்தால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களின்போது, விழா நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் குப்பைகளை உரிய இடத்தில் போடாமல், சாலை ஓரங்களிலேயே கொட்டி விடுகின்றனர்.
இனி இதுபோன்று செய்தால், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதைப் போல, குடியிருப்பு வாசிகள், தெருக்களில் குப்பையைக் கொட்டினால் ஆயிரம் ரூபாயும், வணிக வளாக வியாபாரிகள் பொது இடங்களில் கொட்டினால் ஆயிரம் ரூபாயும், வளாக உரிமையாளருக்கு 2,000 ரூபாயும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பொதுமக்கள், சிறு- பெரு வணிகர்கள், வியாபாரிகள், நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த அபராத முறை பொருந்தும். துப்புரவு ஆய்வாளர்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதைக் கண்காணிப்பர். இதன் மூலம் குப்பைப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
