PUBLISHED ON : ஜூலை 04, 2016

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நமீபியா, வடகிழக்கு அட்லான்டிக் கடல்களில், 600 மீட்டர் ஆழத்தில் வசிக்கும் மீன் இது. பெயர் ஆரஞ்சு ரஃபி. நன்கு வளர்ச்சியடைந்த மீன் ஒன்று முக்கால் மீட்டர் நீளம் வரை இருக்கும். இதன் சுவை அலாதியானது என்று சொல்லப்படுகிறது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இப்படி ஒரு சுவையான மீன் இருப்பது மீன் பிரியர்களுக்கு அவ்வளவாகத் தெரியாமல் இருந்துள்ளது. அதற்குக் காரணம் கடலின் அடி ஆழத்தில் இவை காணப்படுவதே. 'டிராலர்' எனப்படும் இழுவை மீன்பிடி படகுகள் வருவதற்கு முன்னர், வலையை விரித்துக் கடலின் மேற்பரப்புகளில் காணப்படும் மீன்களை மட்டுமே பிடிப்பது வழக்கமாக இருந்தது. இதனால், ஆழத்தில் இருந்த இந்த மீன்கள் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியவில்லை. டிராலர் வந்த பிறகு, ஆழத்தில் இருக்கும் மீன்களைப் பிடிப்பது சாத்தியம் ஆனதால், அள்ள அள்ள சுவையான ஆரஞ்சு மீன்கள் கிடைத்தன.
வருடா வருடம் அள்ளிக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்? மீனின் எண்ணிக்கை குறையும். 'அதனால் என்ன? பொதுவாக மீன்கள்தான் குஞ்சு பொரித்து மீண்டும் உற்பத்தி ஆகுமே!' என்று நாம் நினைக்கலாம். ஆனால் 'ஆரஞ்சு மீன்கள் இல்லவே இல்லை!' என்று சொல்லும் அளவிற்கு மிகவும் குறைந்துவிட்டது. பிற மீன்களைப் போல் இவை ஏன் மடமடவென்று மறுஉற்பத்தி ஆகவில்லை என்ற ஆராய்ச்சிகள் தொடங்கின. ஆராய்ச்சிகளின் முடிவில் 'இந்த மீன்கள் மிகவும் நிதானமாக வளர்ந்து, 150 வருடங்கள்வரை வாழக் கூடியவை' என்பது தெரியவந்தது. மீன் இனத்திலேயே அதிக வாழ்நாள் கொண்டவை இந்த ஆரஞ்சு ரஃபிகள்தானாம்!
அதைவிட அதிசயம், மிக நீண்ட வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே சினை கொள்ளும் பண்பை இவை பெற்றிருக்கின்றன. அதுவும் 20 வயதில் இருந்து 30 வயதுக்குள் இவற்றின் மறுஉற்பத்தி திறன் முடிந்துவிடுமாம். ஆக, ஒரு மீன் பிடிக்கப்பட்ட பிறகு, அடுத்த மீன் குஞ்சு பொரித்து வளர்வதற்குக் குறைந்தது 40 ஆண்டுகள் ஆகிவிடும். சினை கொள்ளாத மீன்களைப் பிடித்துவிட்டால், வாய்ப்புகள் இன்னும் குறைவு. மறுஉற்பத்தி வேகத்தைக் காட்டிலும் வேகமாக வேட்டை ஆடப்பட்டதால், இன்று இதன் தொகை 10 சதவிகிதத்துக்கும் குறைவாகிவிட்டதாம். சரி இப்போதாவது இவற்றைப் பிடிப்பது நிறுத்தப்பட்டதா என்றால், இல்லை என்பதுதான் சோகம்.
