PUBLISHED ON : செப் 30, 2019

கவனம் : மது ஒழிப்பு
இன்று அரசுகளே மதுக்கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு, அதன் மூலம், லாபம் ஈட்டக் காத்திருக்கின்றன. இன்றைய நிலையில், மதுவிலக்கை எப்படிக் கொண்டுவருவது? காந்தி அவர் காலத்தில் அதை எப்படிச் செய்தார்? அது இப்போதும் சாத்தியமா? இதற்கு காந்திய தீர்வு என்ன?
சென்ற தேர்தலின்போது, அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவிலக்கைக் கொண்டுவருவோம் என்றன. ஆனால் அந்த வாக்குறுதியைச் செயற்படுத்தவில்லை. பேனர்களுக்கு எதிரான நடவடிக்கை இப்போது சுறுசுறுப்பாகியுள்ளது. அதுபோன்று மதுவிலக்கையும் மக்கள் கையில் எடுக்க வேண்டும். மக்களின் அழுத்தம் இருக்கும்போது தான், அரசியல் கட்சியினர் செயற்படத் தொடங்குவார்கள்.
காந்தியடிகள், “பெண்களுக்கும் மாணவர்களுக்கும் மதுவை ஒழிப்பதில் முக்கிய பங்கு இருக்கிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களைத் தங்களின் அன்புப்பிடியில் கொண்டுவந்து, அவர்களை அதிலிருந்து மீட்டு, மீண்டும் அந்த தீயபழக்கத்திற்கு செல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்.
“நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால், உடனடியாக எந்த ஓர் இழப்பீடும் கொடுக்காது, அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிடுவேன்.” என்கிறார் காந்தி.
காந்தி காலத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க மதுக்கடைகள் முன் பெண்கள் உட்கார்ந்துகொண்டு குடிக்க வருபவரின் காலில் விழுந்து தடுத்தார்கள். சட்டத்தின் மூலம் தடுப்பதைவிட, சாத்வீக வழியில் குடிப்பவர்களைத் திருத்த வேண்டும் என்பதே காந்திய வழி.
அ.அண்ணாமலை.
டில்லி 'காந்திய அருங்காட்சியத்தின்' இயக்குனர்

