PUBLISHED ON : செப் 30, 2019

கவனம்: பாதுகாப்பு
இன்று பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் அனைத்து வயதுப் பெண்களும் வன்முறைக்கு ஆளாவது கவலை அளிக்கிறது. பெண் தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய, காந்தி காட்டும் வழிமுறை என்ன?
”ஒரு பெண் தாக்கப்படும்போது, ஹிம்சை, அகிம்சை என்றெல்லாம் அவள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, அவளுக்குத் தோன்றும் எந்த வழியையும் பின்பற்ற அவளுக்கு உரிமையுண்டு. கடவுள் அவளுக்கு பற்களையும், நகங்களையும் கொடுத்திருக்கிறார். தன் பலம் கொண்ட மட்டும் அவள் அவற்றை உபயோகிக்கவேண்டும்; அவசியமானால், அந்த முயற்சியில் உயிரையும் விடவேண்டும். சாவைப் பற்றிய பயத்தையெல்லாம் விட்டொழித்து விடவேண்டும்.” (ஹரிஜன் இதழ், 1.3.42) என்கிறார்.
இன்னொரு இடத்தில், “போக்கிரிகளால் தாக்கப்படும்
போது, ஆயுதங்களில்லாமல் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத பெண்களிருந்தால், ஆயுதம் வைத்துக்கொள்ளும்படி அவர்களுக்கு யோசனை சொல்ல வேண்டிய அவசியமில்லை. தாமாகவே அவர்கள் அப்படிச் செய்வார்கள்.” (ஹரிஜன் இதழ், 9.2.47)
அவரே இன்னொரு சந்தர்ப்பத்தில், ''பெண்களை இழிவுபடுத்தியது தொடர்பாக ஆண்கள் கடும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்!” (யங் இந்தியா 7.5.31) என்றும் எழுதியுள்ளார்.
பாதிக்கப்படும் பெண் மீதே சேற்றை அள்ளிவீச, இச்சமூகம் தயங்குவதே இல்லை. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்புபற்றி காந்தி கூறி இருக்கும் கருத்துகள், உண்மையில் புரட்சிகரமானவை. அவரது மற்ற அணுகுமுறைகளில் இருந்து இது முற்றிலும் மாறானது.
ஆம்! தன் வாழ்நாள் முழுவதும் அகிம்சையைப் போதித்த காந்தியடிகள், பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் அதையெல்லாம் பார்க்கவில்லை.
''பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிவிட்டேன். ஆனால், இத்தகைய குற்றங்களைப் பார்க்கும் ஆண் என்ன செய்ய வேண்டும்? அதை அவன், பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அவன், பெண்ணைக் காப்பாற்ற வேண்டும். போலீஸ் உதவியைத் தேடிக்கொண்டு அவன் ஓடக்கூடாது; ரயில் வண்டிகளில் அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுப்பதுடன் திருப்தியடைந்துவிடக் கூடாது. அவன் அகிம்சையைப் பின்பற்ற முடிந்தால், அந்த முயற்சியில் தன் உயிரை விட்டு, அதன் மூலம் ஆபத்திலிருக்கும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவான். அகிம்சையில் அவனுக்கு நம்பிக்கை இல்லையென்றால், அல்லது அதைப் பின்பற்ற முடியவில்லையென்றால், தன்னிடமுள்ள சக்தி பூராவையும் உபயோகித்து அவளைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். எப்படிச் செய்தாலும், தன் உயிரை விட அவன் தயாராயிருக்க வேண்டும்'' (ஹரிஜன் இதழ், 1.3.-42)

