PUBLISHED ON : செப் 30, 2019
கவனம்: அரசியல் ஈடுபாடு
வீடு, பணியிடம், மீண்டும் வீடு என, இன்றைய பெண்கள் பலரின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. நாடு பற்றியும், நாட்டில் நடக்கும் எதைப் பற்றியுமே கவலை இல்லாதவர்களாகவே பலர் உள்ளனர். பொதுத்தளங்களில் பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கு காந்தி வழிகாட்டுகிறார்.
“பெண்கள், அடுக்களைகளில் அடிமைகளாக உழைப்பது காட்டுமிராண்டித்தனத்தின் சின்னம்தான் என்பதே என்னுடைய அபிப்பிராயமாகும். இக்கொடுமையிலிருந்து நமது பெண்களை விடுதலை செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது. குடும்ப வேலை என்பது பெண்களின் நேரம் பூராவையுமே விழுங்கிவிடுவதாக இருக்கக்கூடாது.” ('ஹரிஜன்' 8.-6.-40) என்று ஆதங்கப்படும் காந்தி,
“இந்தியாவின் சுயராஜ்யப் போராட்டத்தில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு இருக்க வேண்டும். (யங் இந்தியா, 15.12.-1921) என்று தெரிவித்துள்ளார்.
“இந்தியாவிலுள்ள பெண்கள் தங்களுடைய முகமூடிகளை கிழித்தெறிந்துவிட்டு, தேசத்திற்காகப் பணியாற்றுவதற்கு முன்வந்தார்கள். தமது குடும்பங்களைப் பராமரிப்பதைவிட, அதிகமான சேவையை தேசம் தம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது என்பதை அவர்கள் உணந்திருந்தனர். சட்டத்திற்கு விரோதமாக உப்பு உற்பத்தி செய்தார்கள்: அந்நியத் துணிக்கடைகளையும், கள்ளு, சாராயக்கடைகளையும் மறியல் செய்தார்கள். சிறைக்கும் சென்றார்கள். ஆண்களைவிட, அதிக தடியடியைத் தாங்கிக்கொண்டார்கள்.''
('யங் இந்தியா', 14-.1. 1932) என்று பாராட்டியும் ஊக்கப்படுத்தியும் எழுதி, பெண்களை பொதுத்தளத்திற்கு அழைக்கிறார்.
- த. ரவிச்சந்திரன்,
காந்தி கிராமப் பல்கலைக்கழகம்

