கவனம்: வேலைப் பங்கீடு
படிக்கும் பெண் பிள்ளைகளாகட்டும், வேலைக்குச் செல்லும் மகளிராகட்டும்; அவர்கள் இரட்டைச் சுமையைச் சுமக்கிறார்கள். வேலைக்கும் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்ததும் சமையல் செய்வதில் தொடங்கி இதர வீட்டுப்பணிகளைச் செய்யவேண்டும். அதேநேரம் வேலைக்குச் சென்று திரும்பும் ஆண், வீட்டுக்குள் நுழைந்ததும் எந்த வேலையும் செய்வதில்லை.
இத்தகைய ஏற்றத்தாழ்வுக்கு காந்தி தரும் தீர்வுகள் என்ன?
''குழந்தைப் பராமரிப்பு, குடும்பப் பராமரிப்புகளைச் செய்தால் அவளுக்கு வேறு பொழுதோ, நேரமோ இருக்காது. ஆடவன் வருமானத்திற்கு வேண்டியதைச் செய்ய, பெண்கள் குடும்பக் காரியங்களைச் கவனித்து நடத்தி வருவார்கள். இப்படியே அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து குடும்பத்தை நடத்தி வருவார்கள்.” (ஹரிஜன் 12.10.34)
இந்தக் கருத்துகள் இன்றைய காலத்தில் பிற்போக்கு எண்ணங்களாகத் தோன்றலாம். ஆனால், இதன் பின்னே, பெண்கள் மீதான தந்தைக்கே உண்டான அக்கறை வெளிப்படுகிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். அவரே வேறொரு சந்தர்ப்பத்தில் பேசிய விஷயம் நம் கவனத்தைக் கவர்கிறது.
1958இல் புஷ்பா ஜோஷி என்பவர் எழுதிய, 'பெண்களைப் பற்றி காந்தி' எனும் நூலில், ''பெண் இனத்தை நாம் இந்தக் கொடுமையிலிருந்து மீட்க அதிக காலம் எடுக்கக்கூடாது. பெண்கள் வீட்டுவேலைகளுக்கே நேரம் போதாது எனும் நிலையில் இருந்து வெளியே கொண்டு வரவேண்டும். இந்த அடிமைத்தனத்திலிருந்து பெண்களை மீட்கவேண்டும் என கருதுகிறேன்” என்று காந்தி குறிப்பிட்டதாகக் கூறுகிறார்.
அவரது சபர்மதி ஆசிரமத்தின் வேலைகளை, சமைப்பதில் தொடங்கி, பாத்திரம் கழுவது, கூட்டிப்பெருக்குவது என, எல்லா பணிகளையுமே ஆண்கள், பெண்கள் இருவரும் செய்துவந்தனர்.

