தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மாலு மும்பை ஆஹே!

மாலு மும்பை ஆஹே!

மாலு மும்பை ஆஹே!


PUBLISHED ON : பிப் 06, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 06, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைப்புக்கு என்ன அர்த்தம்னு யோசிக்கிறீங்களா? மாலு மும்பைக்கு வந்திருக்கான்னு அர்த்தம். மராத்தியில. பாலுவும் வாலுவும் இதுக்கு முன்னே மும்பைக்கு போயிருக்காங்க. நான் வர்றது இதுதான் முதல் தடவை. ஞாநி மாமா அவர் மகனைப் பார்க்கப் புறப்பட்டதும் நாங்களும் கூடவே வந்துட்டோம்.

24 மணி நேரம் ரயில்ல போனதும் இதுதான் முதல் தடவை. தாதர் எக்ஸ்பிரஸ்ல எனக்கு ரொம்பப் பிடிச்சது தக்காளி சூப்தான். சின்னதா வறுத்த ரொட்டித் துண்டு போட்டு சூடா அந்த சூப் குடிச்சப்ப ரொம்ப ருசியா இருந்தது. ஒரு நாள்ல நாலஞ்சு தடவை குடிச்சேன்.

தாதர்ல ரயில் மாறி கோரேகாவ்ன் போனோம். கோரான்னா வெள்ளை. காவ்ன்னா கிராமம். இப்ப அதுவும் மும்பை சிட்டிதான். அங்கே நிறைய மாடு வளர்த்து பால் உற்பத்தி செஞ்சதால அந்தப் பேராம். இப்பவும் மும்பைக்கு பால் வழங்கற 'ஆரே பால் பண்ணை' அங்கேதான் இருக்கு. அங்கே வேலை பார்க்கறவங்க 70 % தமிழர்கள்தான்!

தாதர்ல மாறின ரயில் வேற மாதிரி. சென்னையில பீச், -செங்கல்பட்டு ரயில் மாதிரி பார்க்க இருந்தது. ஆனா கூட்டம் நூறு மடங்கு. எப்பிடி ஏறணும்னும் தெரியல; இறங்கணும்னும் தெரியல. வாசல் கிட்ட நின்னா, கூட்டமே நம்மை ஏத்தி இறக்கிடும். மாமா வீட்டுக்கு வந்தா அது 23வது மாடி! மின்தூக்கி வேலை செய்யாட்டி அவ்வளவுதான். ஆனா மும்பையில பவர் கட்டே கிடையாதாம்! சென்னையில என் வீட்டுக்கு மாடியே கிடையாது. தனி வீடு. பின்னால சின்ன தோட்டம்.கேணி எல்லாம் இருக்கு. மும்பையில கேணிக்கெல்லாம் சான்சே இல்லை. ஒரு கேணி இருக்கற எடத்துல பத்து மாடி கட்டிடுவாங்க போல இருக்கு.

நான் இருந்த 23வது மாடியிலருந்து பார்த்தா எதிர்ல நாலு கட்டடம். ஒவ்வொண்ணும் 50 மாடியாம்! ஒரு கட்டடத்துலயே 300 வீடு!

மும்பையோட மொத்த மக்கள்தொகை இப்ப ரெண்டு கோடியாம்! சென்னை 70 லட்சம்தான்! மும்பையில பெரிசா தண்ணீர்ப் பஞ்சம் வந்தது இல்லைன்னு சொல்றாங்க. வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்பு திட்டம்லாம் எதுவும் இல்லை. நான் வந்தப்ப மழைகாலம் முடிஞ்சுடுச்சு. “மழை பெய்யறப்ப வந்தா தெரியும். அந்த மாதிரி மழையை நாம 2015 டிசம்பர்ல மட்டும்தான் பாத்திருக்கோம். இங்கே ஒவ்வொரு ஆண்டும் அப்படித்தான் பெய்யும்.” என்றார் மாமா.

“அவ்வளவு தண்ணியும் கடலுக்கு ஓடிப்போயிடுது இல்ல? மூணு பக்கமும் கடல் இருக்கே. குடிநீர் எங்கிருந்து வருது?” என்றேன். வாலு உடனே புள்ளிவிவரங்களை அடுக்கியது. தினமும் 300 கோடி லிட்டர் குடிநீர் மும்பையில் வழங்கப்படுகிறதாம். மும்பைக்கு பக்கத்தில் இருக்கும் தாணே, நாசிக் மாவட்டங்களில் இருக்கும் அணைகளிலிருந்து தண்ணீர் வருகிறது. மும்பைக்குள்ளேயே மூன்று பெரிய ஏரிகள் இருக்கின்றன. துளசி, விரார், பொவாய் ஆகிய ஏரிகளில் இப்போது பொவாயை சுற்றியும் கட்டப்பட்ட வீடுகளிலிருந்து கழிவுகளை சேர்ப்பதால் அது கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. மீதி இரு ஏரிகளும் குடிநீர் வழங்குகின்றன.

“மும்பைக்கும் சென்னைக்கும் இருக்கற ஒரே ஒற்றுமை நகரத்துக்குள்ளே ஓடற ஆறுதான். அந்த ஆறுதான் துளசி, விரார் ஏரிக்கெல்லாம் நல்ல தண்ணியைக் கொண்டு வருது. அதே ஆறு பொவாய்க்கு அப்பறம் நம்ம கூவம் மாதிரி ஆயிடுது.” என்றார் மாமா.

“நம்ம அரசாங்கம்லாம் அடிக்கடி கூவத்தை சுத்தப்படுத்துவோம்னு சொல்ற மாதிரி இங்கேயும் சொல்வாங்க, இல்ல?” என்றான் பாலு. “சொல்றாங்க. அதே மாதிரி கோடிக்கணக்கான ரூபாயை செலவும் செய்யறாங்க. ஆனா அதெல்லாம் எதுக்கு பயன்பட்டதுன்னே தெரியல. நம்மைவிட இங்கே மீடியாவும் மக்களும் கொஞ்சம் பரவாயில்லை. விடாம கேள்வி கேட்பாங்க. மித்தி ஆறு சுத்தப்படுத்தற கோரிக்கை இயக்கத்துல பொதுமக்கள், இளைஞர்கள் தீவிரமா பங்கேற்கறாங்க. இந்தியாவோட வாட்டர்மேன்னு புகழப்படற ராஜேந்திர சிங் ஆற்றங்கரையில் இதுக்காக ஒரு பாத யாத்திரை நடத்தியிருக்காரு.” என்றார் மாமா. இருக்கிற ஒரு வாரத்தில் ஹிந்தி, மராத்தி நாடகம், சினிமா பார்க்கவேண்டும். “மூணு பக்கமும் கடல் இருக்கே. அப்ப மெரினா, எலியட்ஸ் பீச் மாதிரி நிறைய கடற்கரை இருக்கும் இல்லியா?” என்றேன். “அதான் இல்லை. நரிமன் பாய்ன்ட்டும் ஜுஹுவும் ஒர்லியும்தான். மூணும் புதுச்சேரி பீச் மாதிரி குட்டி குட்டியாதான் இருக்கும்.”என்றார் மாமா.

ஏ.ஆர்.ரஹ்மான் 'ஹாஜி அலி ஹாஜி அலி'ன்னு ஒரு பாட்டு பாடியிருப்பார் இல்லியா, அந்த ஹாஜி அலி தர்காவுக்கு கடலுக்குள்ளே ஒரு கிலோ மீட்டர் நடந்து போகணும். போய்ப் பார்த்தேன். அந்த தர்கால ஆண், பெண் எல்லாரையும் அனுமதிச்சுகிட்டிருந்தாங்க. “பெண்களையும் உள்ளே விடணும்கற உச்ச நீதிமன்ற உத்தரவை தர்கா நிர்வாகம் ஏத்துகிட்டது” என்றார் மாமா. இதுக்கு பெரிய சர்ச்சை எதுவும் வரலியாம்!

இன்னிக்கு காலை பேப்பர்ல வேற ஒரு சர்ச்சை இருந்தது. மகாராஷ்டிர பள்ளிக்கூடங்கள்ல 12ம் வகுப்பு சமூகவியல் பாடப் புத்தகத்துல வரதட்சிணை பத்தின பாடத்துல 'அசிங்கமாவும் உடல் ஊனமாகவும் இருக்கற பெண்களுக்கு திருமணம் நடக்கறது கஷ்டமா இருக்கு. அதனால அவங்க கிட்ட அதிகமா வரதட்சிணை கேட்கறாங்க.'ன்னு எழுதியிருக்கு. இதேபோல 'வேலைக்கு போற பெண்கள் எல்லாரும் பொருளாதார தன்னிறைவை அடையறது இல்ல. அவங்க சம்பாதிக்கறதை கணவன் கிட்ட கொடுத்தாகணும்னு இருப்பதாலே தன் விருப்பப்படி செலவு செய்ய முடியாது.'ன்னும் பாடத்துல இருக்கு.

இதையெல்லாம் எடுக்கணும்னு எதிர்ப்பு வந்திருக்கு. எடுத்துடறதா கல்வி அமைச்சர் சொல்லியிருக்காரு. எனக்கென்னவோ இதெல்லாம் பாடத்துல இருக்கணும்னுதான் தோணுதுன்னு மாமா கிட்ட சொன்னேன். அவரும் “ஆமா. ஆனா வாக்கியங்களை திருத்தணும். அழகா இல்லைன்னு கருதப்படும் பெண்கள்கிட்ட அதிக வரதட்சிணை கேட்கறாங்கன்னு எழுதணும்.”என்றார். எது அழகு, ஏன் பொண்ணு மட்டும் டவ்ரி குடுக்கணும் இதையல்லாம் பத்தி வகுப்புல ஆசிரியரும் மாணவர்களும் விவாதிக்கணும். அப்பதான் தெளிவு வரும்.

“நம்ம நாட்டுல நிறைய சுத்தப்படுத்த வேண்டியிருக்கு. ஆறுலருந்து மனசு வரைக்கும்.” என்றேன். ஸ்வச்சித் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்தணும்னு பிரதமருக்கு எழுது என்றது வாலு. அவருக்கா என்றான் பாலு. எதையும் சுத்தப்படுத்துவது நம்ம ஒவ்வொருத்தர் கையிலும்தான் இருக்கு என்றார் மாமா.

வாலுபீடியா 1

இந்தியாவில் சராசரியாக வருடத்துக்கு 10 ஆயிரம் பெண்கள் வரதட்சிணைக் கொடுமையால் இறக்கிறார்கள். இதில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேச மாநிலம்.

வாலுபீடியா 2

கிராமங்களில் ஆளுக்கு 40 லிட்டரும் நகரங்களில் 135 லிட்டரும் தினசரி தண்ணீர் தேவை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2050ல் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சரிபாதி நகரங்களில் இருப்பார்கள்.(சுமார் 84 கோடி).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us