PUBLISHED ON : ஜூன் 06, 2016

அம்மா இன்றைக்கு இட்லி ஊற்றினார். அப்பாவும் அவ்வப்போது ஊற்றுவார். ஆனால், அவருக்கு இன்னமும் அம்மாவின் கைப்பதம் வரவில்லை. அம்மா ஊற்றும் ஒவ்வொரு இட்லியும் தட்டையாக, சப்பையாக இருக்காது. அதே சமயம் ரொம்ப குண்டாகவும் இருக்காது. விள்ளலாக பிய்த்துச் சாப்பிட்டால் மிருதுவாக இருக்கும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசமான விஷயம் இருக்கும். சாம்பார், சட்னி, பொடி, நெய், தயிர், என்று இட்லிக்கு இத்தனை விதமாக சிநேகம் சேர்க்க முடியுமா? என்று ஆச்சரியமாக இருக்கும்.
பாலு வந்ததும் அம்மா, ''நாலு இட்லி சாப்பிடறியா பாலு?” என்று கேட்டார். “எனக்கு முதல்ல ஸ்வீட்தான் வேணும். நான் இன்னிக்கு ஒரு உலக மகா விஞ்ஞானக் கண்டுபிடிப்பைக் கொண்டாடிக்கிட்டு இருக்கேன்” என்றான் பாலு. “என்ன கண்டுபிடிப்பு அப்படி?” என்று கேட்டார் அம்மா.
“நீராவியை வெச்சுகிட்டு இன்ஜினை ஓட்டலாம்னு ஜேம்ஸ்வாட் கண்டுபிடிச்சது 300 வருஷம் முன்னால இதே ஜூன்லதான். அந்தக் கண்டுபிடிப்புக்கு அப்புறம்தான் உலகத்துல பெரிய அளவுல ரயில் போக்குவரத்து நடக்க ஆரம்பிச்சு எல்லா வளர்ச்சியும் ஏற்பட்டுது.”
“நீராவியை வெச்சு அவர் இன்ஜின் கண்டுபிடிக்கறதுக்கு 500 வருஷம் முன்னாடியே நம்ம ஊர்ல அதே நீராவியை வெச்சு இட்லி அவிக்கலாம்னு கண்டுபிடிச்சுட்டாங்களே” என்றார் அம்மா.
“இட்லி எல்லாம் ஒரு கண்டுபிடிப்பா, ஹே” என்றான் பாலு.
“பாலு என்ன நடிகவேள் எம்.ஆர்.ராதா மாதிரியே பேசுகிறான்?” என்றபடி வந்தார் ஞாநி மாமா. “ராதாதான் ஒரு படத்துல நீராவியை வெச்சுகிட்டு இங்கிலீஷ்காரன் ரயிலையே ஓட்டறான். நாம வெறுமே இட்லி அவிச்சு சாப்பிட்டுகிட்டிருக்கோம்னு கிண்டல் பண்ணுவார்.”
“இட்லி அவ்வளவு கேவலமானதா என்ன? அதுவும் நமக்குத் தேவையான உணவுதானே” என்றார் அம்மா.
“ரொம்ப ரொம்பத் தேவையானது. இட்லில நாம அரிசியையும் உளுந்தையும் கலக்கற முறை இப்ப மருத்துவ ரீதியா முக்கிய
மானதாக் கருதப்படுது. 70% அரிசி 30% உளுந்துங்கற விகிதம்தான் சராசரி மனிதனோட தேவையான மாவுச்சத்து புரதச்சத்து விகிதத்தோட இசைஞ்சு போகுதுன்னு இப்பச் சொல்றாங்க” என்றார் மாமா.
“எல்லாம் சரி. நீராவி இன்ஜினை ஜேம்ஸ் வாட் கண்டுபிடிச்சாரு. அத மாதிரி இட்லியைக் கண்டுபிடிச்சது யாரு?” என்றான் பாலு.
“எல்லா கண்டுபிடிப்புக்கும் யாராவது ஒரு தனி நபர் பேரைச் சொல்லணும்னு அவசியம் இல்ல” என்றார் மாமா. “போன 400 , 500 வருடங்கள்ல நடந்த கண்டுபிடிப்புகளுக்குதான் நமக்குக் குறிப்பிட்ட நபர்கள் பெயர் தெரிய வந்திருக்கு. அதுக்கு முன்னே ஆயிரக்கணக்கான வருடங்களா நிறையக் கண்டுபிடிப்பு நடந்திருக்கு. அதுக்கெல்லாம் தனியா யார் பேரும் நமக்குத் தெரியாது” என்றார் மாமா.
“பெரிய பெரிய கோவில் சிற்பங்களையெல்லாம் யார் செஞ்சாங்கன்னு பேரா இருக்கு? அந்த மாதிரிதான்.” என்றார் அம்மா.
“நிறைய விஷயம் தனி ஆளா செஞ்சதே இல்ல. அடுத்தடுத்து பல பேர் முயற்சி பண்ணிக் கடைசியில ஒரு கட்டத்துல சரியா அமைஞ்சப்ப யார் அதைச் செய்தாரோ அவர் பெயரைக் குறிப்பிடறோம்” என்றார் மாமா.
நான் பாலுவிடம் சொன்னேன்.
“ஜேம்ஸ் வாட் நீராவி இன்ஜினைக் கண்டுபிடிச்சது கூட அந்த மாதிரிதான். அவருக்கு முன்னாடியே நிறைய விதமான நீராவி இன்ஜின் இருந்துது. அது எல்லாத்துலயும் ஒரு பெரிய பிரச்னை. அது தயாரிக்கிற வெப்ப ஆற்றலை முழுசா இயக்க ஆற்றலா மாற்றமுடியாம, பெரும் பகுதி வீணாகிக்கிட்டிருந்துது. ஜேம்ஸ் வாட் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடிச்சு, எப்படி அதிகமான வெப்ப ஆற்றலை வீணாகாமப் பயன்படுத்தலாம்னு இன்ஜின்ல திருத்தங்கள் செய்தார். அது பெரிய தொழிற்புரட்சிக்கே வழி வகுத்தது.”
“எல்லாம் சரி. ஆனா இன்னிக்கு ரயில் நீராவி இன்ஜின்லயா ஓடுது? டீசல், கரன்ட் எல்லாம் வந்தாச்சுல்ல. பழைய கரி இன்ஜின் வண்டியை நீங்கள்லாம் போட்டோலதான் பார்த்திருப்பீங்க. ஆனா, இன்னும் இட்லி ஓடிக்கிட்டுதானே இருக்கு. ஏற்ெகனவே நாலு ஈடு வெச்சாச்சு. இப்ப அடுத்த ஈடு. ஆக இட்லிதான் சிறந்த கண்டுபிடிப்பு” என்றார் அம்மா.
“அதுல சந்தேகமே இல்ல. நீராவி இன்ஜின் ரயிலுக்குதான் இப்பப் பயன்படல. இன்னும் பல தொழிற்சாலைகள்ல அதுக்கு இப்பவும் வேலை இருந்துகிட்டுதான் இருக்கு” என்றார் மாமா.
“எதுக்கெல்லாம் தேவை இருக்கோ அதெல்லாம் தொடர்ந்து இருக்கும். எதுக்குத் தேவை இல்லையோ அது காணாம போயிடும்” என்றது வாலு.
“ஏய் வாலு, இத்தனை நேரம் நீ எங்கே இருந்தே?” என்றேன்.
“இங்கேதான் இருந்தேன். பொன்மொழி சொல்றதுக்கு என் தேவை வந்த உடனே உங்களுக்குத் தெரியறேன்” என்றது வாலு. எல்லாரும் வாயில் இட்லியை அடக்கிக்கொண்டு சிரித்தோம்.
வாலுபீடியா1: ஜேம்ஸ் வாட் (19.1.1736 -- 25.8.1819) செய்த இன்னொரு முக்கிய கண்டுபிடிப்பு நகல் எடுக்கும் இயந்திரத்தை உருவாக்கியது. அதுவரை ஒரு ஆவணத்தைப் பிரதி எடுக்க வழிகள் இல்லை. இவர், ரசாயனங்களைப் பயன்படுத்திப் பிரதி எடுக்கும் முறையை உருவாக்கினார்.
வாலுபீடியா 2: இட்லி எங்கே, எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பது பெரிய சர்ச்சைக்குரிய விஷயம். 17ஆம் நூற்றாண்டில் மச்ச புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இட்லி ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்த இந்திய மன்னர்களால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டதாகச் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
வாலுபீடியா 3: குதிரை சக்தி அடிப்படையில் ஆற்றலை அளக்கும் முறையை வாட் உருவாக்கினார். இப்போது ஆற்றலை அளக்கும் முறையில் அடிப்படை அளவுக்கு அவர் பெயரான 'வாட்' என்பதே வைக்கப்பட்டுள்ளது.

