PUBLISHED ON : ஜன 07, 2019

இந்தியாவைச் சேர்ந்தவர் பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் ஜோதி ராந்தவா. இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தத்வா புலிகள் காப்பகத்துக்கு வேட்டையாடச் சென்றார். அங்கே அருகிவரும் விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடியதற்காக, கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். ஓர் இறந்துபோன காட்டுக்கோழியையும் ஒரு விலங்கின் தோலையும் இவரிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது அந்தத் தோல் காட்டுப் பன்றியினுடையது என்று அவர் சொன்னார். ஆனால், தடயவியல் பரிசோதனையில் அந்தத் தோல் கடமானின் (Sambar Deer) தோல் என்பது தெரிய வந்தது.
இதுபோன்று மற்றுமொரு சம்பவமும் சமீபத்தில் நடைபெற்றது.
மும்பையில் உள்ளது சஞ்சய்காந்தி தேசியப் பூங்கா. அதன் அருகே, அழுகிய நிலையில் மூன்று வயதுச் சிறுத்தையின் உடலும் ஒரு கடமானின் உடலும் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, இறந்து கிடந்த விலங்குகளின் உடலில் இருந்து பல முக்கிய உறுப்புகள் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது.
கடந்த ஆண்டில் மட்டும், கடமான் இனங்கள் வேட்டையாடப்படுவதும், அதன் உடல் உறுப்புகள் திருடப்படுவதும் என மொத்தம் 27 சம்பவங்கள் நடந்துள்ளன. இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு என்கிற தனியார் காட்டுயிர் தன்னார்வ அமைப்பு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
பெரியவகை மான்களில், கடமான் இன மான்கள் முக்கியமானவை. மூசே, வபிட்டி ஆகிய மான் இனங்களுக்குப் பிறகு மான் இனங்களிலேயே மூன்றாவது பெரியவகை மான், கடமான் தான்.
கடமான்களை வங்காளப் புலிகளும், ஆசிய சிங்கங்களும் விருப்பத்தோடு வேட்டையாடி உண்ணும். ஆனால், தற்போது கடமான்களை இறைச்சிக்காகக் கொல்லும் மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
காடுகளுக்கு அருகில் வாழும் கிராமத்து மக்களும், காட்டில் வாழ்பவர்களும் கடமான்களை வேட்டையாடி வருகிறார்கள். அதனால், மிகுந்த ஆபத்து நேரக்கூடிய விலங்கினங்களில் ஒன்றாக, பாதுகாக்கப்படவேண்டிய விலங்காக, கடமான் இன மான்களை சர்வதேச வனப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
