PUBLISHED ON : ஜன 07, 2019

குஜராத்தைச் சேர்ந்த மிகப் பழமையான நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் மல்தாரிகள். கால்நடை வளர்ப்பு, மல்தாரிகளின் முதன்மைத் தொழில். கால்நடைகளை மேய்த்தபடி நாடோடியாக அலைவது இவர்களது வாழ்க்கை முறை. 500 ஆண்டுகளாக குஜராத்தில் உள்ள வறண்ட புல்வெளிப் பகுதிகளே இவர்களது வாழ்விடம்.
புதிய ஆசை!
நாடோடி வாழ்க்கையிலிருந்து விலகி, மற்ற மக்களைப் போலவே நிலத்தில் தங்கி விவசாயம் செய்ய மல்தாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
விவசாயம் ஏன்?
மல்தாரிகள் விவசாயத்திற்கு நகர்ந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. குஜராத்தின் வறண்ட புல்வெளிப் பகுதிகளில் சமீபத்தில் மழைப்பொழிவின் அளவு அதிகரித்து விவசாயம் செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது. புல்வெளிப் பகுதிகளில் மழை பொழிவதால் கால்நடை உணவான 'பிரஸோபிஸ் ஜூலிப்ளோரா' (Prosopis juliflora) என்கிற குறுஞ்செடி, செழித்து வளரத் தொடங்கியது. இதனால், மல்தாரிகளின் கால்நடைகளுக்கு உணவு எளிதில் கிடைக்கத் தொடங்கியது. இரட்டை வருவாய் ஆதாரமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகிய இரண்டையும் மல்தாரிகள் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், மல்தாரிகள் தங்களுடைய கால்நடை வளர்ப்புத் தொழிலை கைவிட்டு, விவசாயத்தில் இறங்குவதை பெரும்பாலான மல்தாரிகளே விரும்பவில்லை.
புதிய சிக்கல்!
* பொதுவான புல்வெளிப் பகுதிகளில் மல்தாரி மக்கள் நிலவுரிமை கோரியதில்லை.
* தற்போது விவசாயத்தில் ஈடுபடும் மல்தாரி மக்கள், நிலங்களை ஆக்கிரமித்து அதைச் சுற்றி அகழிகள் வெட்டுகிறார்கள்.
* மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள், அகழிக்குள் தவறி விழுந்து இறக்கின்றன.
சூழலை மாற்றுமா?
”மல்தாரிகள் தங்களது இயல்பைத் தொலைத்து விவசாயத்திற்குள் இறங்குவது சூழல் மண்டலத்தையும் பாதிக்கும்” என்கிறார் சூழல் ஆர்வலரான பங்கஜ் ஜோஷி.
- சு.கவிதா
