PUBLISHED ON : நவ 18, 2019

மும்பையின் உயிர்நாடிகளுள் மிக முக்கியமானவர்கள், டப்பாவாலாக்கள். மும்பையில் இல்லதரசிகளிடமிருந்து டிபன் கேரியர்களை சேகரித்து, குறிப்பிடும் அலுவலக முகவரியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டப்பாவாலாக்கள் சேர்த்து விடுவார்கள்.
சாப்பாட்டுப் பைகளை குறிப்பிட்ட இடத்திற்கு டெலிவரி செய்யும் பழக்கம் மும்பையில்
1890-ஆம் ஆண்டு அறிமுகமானது.
மும்பையில் வாழ்ந்த பார்சி மற்றும் பிரிட்டிஷ் இன மக்களுக்கு சரியான நேரத்தில் சிற்றுண்டி வகைகளை டெலிவரி செய்வதற்காகத்தான் டப்பாவாலாக்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.
மிகக் குறிப்பாக, 'மகாதேவ் பாவாஜி பச்சே' என்கிற மும்பையைச் சேர்ந்த ஒருவர் தான் இச்சேவையைத் தொடங்கினார்.
பிரிட்டிஷ் நபர் ஒருவரது வேண்டுகோளுக்கிணங்க டப்பாக்களில் அடைக்கப்பட்ட சிற்றுண்டி வகைகளை, குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முதன்முதலில் கொண்டு செல்லத் தொடங்கினார்.
பொதுமக்களிடம் இது பிரபலமானது. ஒரு கட்டத்தில் இந்த வேலையில் மும்பையைச் சேர்ந்த எண்ணற்ற மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினர்.
தற்போது குறைந்தபட்சம் 5,000 டப்பாவாலாக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொழில் ஒரு கூட்டுறவு வணிகமாகச் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரத்தின் வர்காரி இனத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். டப்பாவின் குறியீடுகள், அடையாளங்கள், நிறங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியே சர்வசாதாரணமாக டப்பாக்களை டெலிவரி செய்கின்றனர்.
ஒரு சாப்பாட்டு டப்பாவை ஒரே ஒரு டப்பாவாலா மட்டும் குறிப்பிட்ட இடத்திலிருந்து பெற்று, மற்றொரு குறிப்பிட்ட இடத்தில் சேர்ப்பதில்லை. சாப்பாட்டு டப்பாக்கள் ஒவ்வொரு வீடாகச் சேகரிக்கப்பட்டு, ஆறு டப்பாவாலாக்களிடம் கைமாறியே கடைசியாக உரியவரைச் சென்று சேரும். இதுவரை ஒரு டப்பா கூட தவறுதலாக வேறு ஒரு நபருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதில்லை.
