PUBLISHED ON : நவ 18, 2019

குஜராத் மாநிலத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்று, டோக்ளா.
கி.பி.1068-ஆம் ஆண்டு வெளிவந்த குஜராத்திய ஜைன இலக்கியங்களில் 'துக்கியா' என்கிற பெயரில் டோக்ளா பற்றிய உணவுக் குறிப்புகள் இருக்கின்றன.
கி.பி.1520-ஆம் ஆண்டில், 'வரனாக சமுச்சயா' என்கிற பெயரில் டோக்ளா அழைக்கப்பட்டுள்ளது. சுவையாகவும், எளிதில் சமைக்கக்கூடிய உணவாகவும், எளிதில் செரிமானமாகும் உணவாகவும் டோக்ளா இருப்பதால், உணவுப் பிரியர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதைச் செய்வது எப்படி?
அரிசி மாவு, கடலைமாவு இரண்டையும் இரண்டுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். தயிரைச் சேர்த்து நன்கு கலந்து, ஓர் இரவு முழுக்க புளிக்கவைக்க வேண்டும். புளித்த மாவை ஆவியில் வேகவைத்து துண்டுகளாக்க வேண்டும்.
ஒவ்வொரு துண்டின் மேலும் எண்ணெயில் பொரித்த கடுகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய தேங்காய் போன்றவற்றைத் தூவினால் சுவையான டோக்ளா தயார்.
இதற்குத் தொட்டுக்கொள்ள நன்கு வறுத்த மிளகாய், கொத்தமல்லிச் சட்னி போன்றவை மிகப் பொருத்தம்.
கடலைமாவு தவிர்த்து, துவரம் பருப்பு டோக்ளா, சீஸ் டோக்ளா, ரவா டோக்ளா, கிரீன் பீஸ் டோக்ளா, மல்டி தால் டோக்ளா என்று டோக்ளாவில் பல வகைகள் செய்யப்படுகின்றன.
குஜராத்தில், காலை உணவாகவும், சிற்றுண்டியாகவும் டோக்ளா உண்ணப்படுகிறது. குஜராத்தைத் தவிர, மத்தியப் பிரதேசம் உட்பட இந்தியாவின் மேற்கு மாநிலங்களிலும், டோக்ளா மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது.
டோக்ளாவின் சாயலை ஒட்டி 'கமன்' என்கிற மற்றொரு உணவு வகையும் குஜராத்தில் தயாரிக்கப்படும். அரிசி மாவு இல்லாமல் வெறும் கடலைமாவை மட்டுமே வைத்து, 'கமன்' தயாரிக்கப்படுகிறது. பார்ப்பதற்கு நல்ல மஞ்சள் நிறத்திலும், சாப்பிட மிக மிருதுவாகவும் இருக்கும்.
- கொக்கோ
