
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் என்பது பழமொழி. மிளகின் விஷ முறிவு தன்மைக்காக இவ்வாறு சொல்லப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மிளகு தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது. மிளகின் தாயகம் இந்தியா.
சங்க காலத்தில் காரத்துக்கு மிளகைத்தான் உரலில் இடித்துப் பயன்படுத்தினார்கள். பின் வந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து மிளகாய் இறக்குமதியானது.முற்காலத்தில் ஒருவரிடம் இருந்த மிளகின் அளவை வைத்து அவர் செல்வந்தரா, ஏழையா? என்பதை கணக்கிட்டார்கள்.
மிளகு செடி அல்ல. கொடி. சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, கறுப்பு, வெள்ளை என்று வெவ்வேறான வண்ணங்களில் கிடைக்கிறது. பழுக்காத மிளகை பறித்தால் பச்சையாக இருக்கும். நன்கு பழுத்து காய்ந்தது கறுப்பு நிறமாக வரும். இப்படி பறிக்கும் நாட்களைப் பொறுத்து அதன் வண்ணங்கள் மாறுபடுகின்றன.
தற்போது வியட்நாம்தான் மிளகு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடம் இந்தியா. நம் நாட்டில் கேரளாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எகிப்து நாட்டிற்கு மிளகு பண்டமாற்றாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. எகிப்து 'மம்மி'களை ஆராயும் போது, ராமிசஸ் 2 (Ramesses II) என்பவரது மூக்கில் மிளகு இருந்ததை கண்டறிந்து இருக்கிறார்கள்.
நம் ஊர் மிளகு உலகம் முழுக்க பரவி இருப்பது நமக்குப் பெருமைதானே!

