PUBLISHED ON : டிச 04, 2017

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பட்டம் மற்றும் பட்டயங்கள் வழங்கினார். பட்டம் பெற வந்தவர்களில் 67 வயதான மூதாட்டி ஒருவரும் இருந்தார்.
சென்னை மடிப்பாக்கத்தில் வசித்துவரும் அவரது பெயர் செல்லத்தாய். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிறந்தவர். பத்தாம் வகுப்பு முடித்ததுமே, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவருக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தனர். அதன்பின் சென்னைக்குக் குடிபெயர்ந்துள்ளார். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கோபாலபுரம் அலுவலக கண்காணிப்பாளராக வேலை கிடைத்து பணியில் சேர்ந்துள்ளார். அப்பணியில் இருந்து 2009ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். இத்தம்பதிக்கு மூன்று மகள்கள். அனைவரையும் கல்லூரிவரை படிக்கவைத்து, மணம் செய்துகொடுத்துள்ளனர்.
சிறுவயது முதலே படிக்கவேண்டும் என்ற தன்னுடைய ஆசையை நிறைவேற்ற, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்துள்ளார். கணவரும், மகள்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதனால், வீட்டினர் தூங்கியபின் நடு இரவில் எழுந்து படிப்பாராம். இதற்கிடையில் இவரது கணவர் 2014ஆம் ஆண்டு மரணமடைந்த பின், குடும்பத்தாரின் ஆதரவும் இல்லாது போயிற்று. அந்த நிலையிலும் பல சிரமங்களுக்கிடையில் தனது படிப்பை முடித்துள்ளார் இவர். இந்தப் பாட்டிக்கு தமிழ், ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரியும். தவிர, மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசவும் தெரியுமாம்.
பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்துவரும் இந்த பாட்டியின் ஆசை என்ன தெரியுமா? எப்படியாவது சட்டப்படிப்பில் சேர்ந்து தேர்ச்சிபெற்று, தன்னைப்போல படிப்பைக் கைவிட்டோருக்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கும் உதவி செய்யவேண்டும் என்பதுதானாம்.

