PUBLISHED ON : ஆக 20, 2018

மும்பையைச் சேர்ந்தவர் தீபிகா மாத்ரே. நோயாளிக் கணவன், மூன்று குழந்தைகள் என குடும்பம் மொத்தத்தையும் சுமக்கிறார். காலை 4 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குப் போவார். ரயிலில் பயணம் செய்யும் நேரத்தில், கவரிங் நகையை விற்பனை செய்து வருமானம் ஈட்டுவார். பின், காலை 7 மணிக்கு பணிப்பெண்ணாக வீடுகளில் வேலையை ஆரம்பித்தால், இரவு வரை நீளும்... இந்தக் கடினமான வாழ்க்கையின் நடுவிலும் இவருக்கு இருந்த அபார நகைச்சுவைத் திறமை, தீபிகாவை புகழ்மிக்க மேடை நகைச்சுவை பேச்சாளராக்கியுள்ளது.
“நான் வேலை பார்க்கும் ஒரு வீட்டின் முதலாளிதான் சங்கீதா. இவர் ஒருநாள், அந்த அபார்ட்மென்ட் மக்களுக்காகப் பல்சுவை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அப்போது எனக்குள் ஓர் ஏக்கம் ஏற்பட்டது. 'யார் மகிழ்ச்சியாக இருந்தாலும், எங்களைப் போன்ற பணிப்பெண்கள் கடைசிவரை வேலை, வேலை என்றே கிடக்க வேண்டுமல்லவா' என்று சங்கீதாவிடம் கேட்டேன். திடீரென்று ஒருநாள் பணிப்பெண்கள் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டார். அதிலே என்னைப் பேசச் செய்தார்.
அதன் பின்னர், என் வாழ்க்கையே மாறிவிட்டது” என்கிறார் தீபிகா மாத்ரே.
அந்த நிகழ்ச்சியில் தீபிகா மாத்ரேவின் திறமையைப் பார்த்த நிருபர் ஒருவர், முன்னணி நகைச்சுவை மேடைப் பேச்சாளரான அதிதி மிட்டலிடம் அறிமுகம் செய்துவைத்தார். தீபிகாவுக்குள் இருந்த தயக்கங்களைக் களைந்து, தைரியமாகப் பேச ஊக்கப்படுத்தினார் அதிதி. முதல் நிகழ்ச்சியிலேயே, வீடுகளில் பணிப்பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்துப் பேசி, ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் தீபிகா.
}எங்களை நடத்தும் விதம் மிகவும் வேதனையளிக்கும். பல வீடுகளில், தண்ணீர், உணவே தரமாட்டார்கள். சாப்பாடு கொடுத்தால்கூட அதற்கு என்று தனித் தட்டு வைத்திருப்பார்கள். உரையாடல்கள் மிகக் கடினமாக இருக்கும். இந்த அனுபவங்களை நகைச்சுவையாகப் பேசினேன்; பார்வையாளர்களின் கைதட்டல் கிடைத்தது. பலரும் என்னை வந்து சந்தித்து, 'உங்கள் வலியைப் புரிந்துகொள்ள முடிகிறது' என்றனர். பணிப்பெண்களின் குரலாக நான் ஒலித்தேன் என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது என்கிறார் தீபிகா.
பணிப்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், இடர்களையும், தனது நகைமுரண் பேசுபொருளாக்கிக் கொண்டார், தீபிகா. இன்று, அவர் மும்பையின் முக்கிய நகைச்சுவைப் பேச்சாளர்களில் ஒருவர். எனினும், அவரது குடும்பக் கஷ்டம் முழுமையாகத் தீரவில்லை. முதுகுவலியால் வீட்டுவேலைக்குப் போக முடியாவிட்டாலும், கவரிங் நகைகளை காலை நேரத்தில் விற்கும் வேலையைத் தொடர்கிறார். இரவில், நகைச்சுவைப் பேச்சாளராக வலம் வருகிறார்.
