PUBLISHED ON : டிச 03, 2018
ஓர் அரசாங்க விழா. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கிறார்கள்.
திடீரென்று, அந்த விழாக்கூடத்தின் வாசலில் ஒரு பரபரப்பு. பெரிய வாகனமொன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒரு பெரிய தலைவர் இறங்குகிறார், அனைவரையும் வணங்கியபடி விழா மேடையை நோக்கி நடக்கிறார்.
இப்போது, அந்த விழாக்கூடத்திலிருக்கும் மக்கள் எல்லாருடைய பார்வையும் அந்தத் தலைவர் மீது தான் இருக்கும், ''விழாத் தலைவர் வந்துட்டார், பாரு'' என்பார் ஒருவர். ''நல்லா கம்பீரமா இருக்கார்ல?'' என்பார் இன்னொருவர், இப்படி ஒவ்வொருவரும் தங்கள் அருகிலிருக்கும் இன்னொருவரிடம் அவரைச் சுட்டிக்காட்டி ஏதாவது சொல்வார்கள்.
இந்தப் புகழைப் 'பெருஞ்சுட்டு' என்கிறார் குமரகுருபரர். அவருடைய 'நீதிநெறிவிளக்கம்' என்ற நூலில் இடம்பெற்றுள்ள அழகான சொல் இது.
'சுட்டு' என்ற சொல் சுட்டிக்காட்டுதலைக் குறிக்கிறது. பலரும் ஒருவரைச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொள்ளுதலைச் 'சுட்டு' என்றழைக்கிறார் குமரகுருபரர்.
ஆனால், மக்கள் நல்லவர்களை மட்டுமா சுட்டிக்காட்டிப் பேசுகிறார்கள்? தீயவர்களைச் சுட்டிக்காட்டுகிற வழக்கமும் இருக்கிறதே!
எடுத்துக்காட்டாக, ஒருவர் தன் அலுவலகத்தில் பணத்தைக் கையாடல் செய்து விட்டார். காவல்துறையினர் அவரைப் பிடித்துச் சிறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, அக்கம்பக்கத்திலிருக்கும் ஊழியர்கள், ''இந்த ஆளா திருடினது?'' என்று சுட்டிக்காட்டிப் பேசுவார்கள். இதுவும் 'சுட்டு' என்ற வகையில் வரும்.
அதனால்தான், 'சுட்டு' என்று பொதுவாகச் சொல்லாமல், 'பெருஞ்சுட்டு' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் குமரகுருபரர். அதாவது, ஒருவரைப் பெருமையுடன் சுட்டிக்காட்டிப் பேசுதல்!
ஆங்கிலத்தில் 'Limelight' என்றொரு சொல் இருக்கிறது, தமிழில் அதனைப் 'புகழ்வெளிச்சம்' என்றழைக்கிறோம். அதற்கு இணையான, ஆனால் இன்னும் ஆழமான, அழகான சொல்தான் 'பெருஞ்சுட்டு.'
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய துறையில் சிறப்பாகச் செயற்பட்டு வெற்றிபெற எண்ணுகிறோம். பிறர் நம்மைச் சுட்டிக்காட்டிப் பெருமையுடன் பேச வேண்டும் என்று விரும்புகிறோம். அதாவது, 'பெருஞ்சுட்டு'க்காக ஏங்குகிறோம்.
பெருஞ்சுட்டை விரும்புகிறவர்கள் மூன்றே மூன்று எளிய உத்திகளைப் பின்பற்றினால் போதும் என்கிறார் குமரகுருபரர். அவை:
மற்றவர்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களை எல்லோரிடமும் சொல்லிப் பாராட்டவேண்டும்
அவர்களுடைய குறைகளை ஊர்முழுக்கச் சொல்லிக் கோள்மூட்டக்கூடாது. மட்டம் தட்டக்கூடாது. அவற்றை நம் மனத்துக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் பேச்சில் கர்வம் கூடாது. பணிவாகப் பேச வேண்டும்.
- என். சொக்கன்
