PUBLISHED ON : மே 27, 2019

பழமொழிகளைப் படிக்கும் போது ஒரு பொருளும், ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் வேறொரு பொருளும் தரக்கூடியவை. 'பழமொழி நானூறு' 'தண்டலையார் சதகம்' இரண்டும் பழமொழிகளைக் கொண்டு எழுதப்பட்ட நூல்களாகும். பழமொழிக் பொருள் பொதிந்த பாமர இலக்கிய வடிவம் கொண்டவை.
'அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது
ஆம்படையான் குற்றம் பெண்ணாய் பிறந்தது'
இப்பழமொழியை நேரடியாகப் பார்த்தால், 'சோறு குழைந்து போனதற்கு அடுப்பங்களையே குற்றம்' என்கிறது. அதை சரியாகப் பதத்துடன் பார்த்து இறக்காமல் சமைத்தவரே குற்றவாளி என்பது மறைமுகப் பொருள்.
ஆம்படையான் என்பது கணவனைக் குறிக்கும். அவன் செய்த பாவத்தின் காரணமாகத்தான் பெண் பிள்ளை பிறந்தது என்பது நேரடிப் பொருள். நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப, குழந்தைகள் பிறப்பதில்லை. ஆண், பெண் குழந்தைகள் பிறப்பதற்கு கணவன்தான் காரணம் என்ற உண்மை, திருமூலரில் தொடங்கி, நம் தாத்தா, பாட்டிகளுக்கும் தெரிந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் பழமொழி. இன்றைய அறிவியல் 46 XY என்பது ஆண்களுக்கே உரிய குரோமோசோம்கள் என்று குறிப்பிடுகிறது.
பெண்களின் உடலில் XX என்ற குரோமோசோம்கள் தான் இருக்கும். அப்படி இருந்தால்தான் தாய்மை அடைய முடியும். மாற்றாக 46 XY என்று அபூர்வமாகச் சில பெண்களுக்க இருந்தால், அவர்களுக்கு குழந்தை பிறக்காது. ஆணிடம் உள்ள XY என்ற இரண்டு குரோமோசோம்களில், பெண்ணிடம் எது போய் சேர்கிறதோ, அதைப் பொறுத்தே ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பது தீர்மானமாகிறது.
ஆணிடமுள்ள Y குரோமோசோம், பெண்ணிடம் போய் சேர்ந்தால், பெண்ணிடமுள்ளு X உடன் சேர்ந்து (XY) ஆண் குழந்தை உருவாகிறது. அப்படி இல்லாமல் ஆணிடமுள்ள X குரோமோசோம், பெண்ணிடம் நிரந்தமாய் உள்ள X உடன் சேர்ந்து (XX) பெண் குழந்தை பிறக்கிறது.
இந்த அறிவியல் உண்மை புரியாமல், பெண் குழந்தை பிறப்பதற்கு, தாயே காரணம் என்று இந்த சமூகம் பெண்கள் மீது குற்றம் சுமத்தி வந்திருக்கிறது. குழந்தை பிறப்பு தொடர்பாக திருமூலர், 'ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும்' என்கிறார். அதாவது ஆணிடமுள்ள Y குரோமோசோம் சென்றால், ஆண் குழந்தை பிறக்கும். பெண்ணுக்குரிய X சென்றால், பெண் குழந்தை உருவாகும் என்பதே இதன் நுட்பமான பொருள்.

